விடுதலை புலிகள் மீதான தடையை மத்திய பாஜக அரசு நீக்குகிறது? ஈழத் தமிழர் தலைவர்களுடன் புதிய ஒப்பந்தம்?
முல்லைத்தீவு (இலங்கை): தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்திய பாஜக அரசு நீக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் (முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி) இ.கதிர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் முல்லைத்தீவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இ.கதிர் கூறியதாவது: இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழர் பகுதி வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுவது தொடருகிறது. அம்பாந்தோட்டையும் கொழும்பு கடற்பரப்பும் சீனாவுக்கு விற்கப்பட்டுவிட்டது.

சீனாவின் முனைப்பு
இப்போது ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கில் கால் ஊன்றுவதற்கு சீனா முனைப்பு காட்டுகிறது. இதற்காக வளர்ச்சி திட்டங்கள் என்ற போர்வையுடன் சீனா களமிறங்கி உள்ளது. இலங்கையின் அமைச்சகங்கள் மூலமாக சீனா இந்த ரகசிய வேலைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் கடல் தொழில் அமைச்சகத்தின் மூலமாக சீனா பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.

வேதாரண்யத்துக்கு குறி
முல்லைத்தீவிலும் கால் பதிக்க சீனா முயற்சிக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலைப்பகுதியை கைப்பற்ற விரும்புகிறது சீனா. ஏனெனில் தமிழ்நாட்டின் வேதாரண்யம், சாலைக்கு நேர் எதிராக இருக்கிறது. இந்தியாவின் அந்தப் பகுதிகளை கண்காணிப்பதற்காக முல்லைத்தீவு சாலைப் பகுதியில் காலுன்ற ரகசியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது சீனா.

பாகிஸ்தான் இலக்கு
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுதான் தமிழர் பகுதியை பாகிஸ்தானின் இலங்கை தூதர் பார்வையிடுகிறார். இது ஈழத் தமிழருக்கு நல்லது அல்ல. ஏனெனில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களை உருவாக்கியது பாகிஸ்தான். இந்தியாவை ஒட்டிய பருத்தித் துறை துறைமுகத்தையும் பாகிஸ்தானின் தூதர் பார்வையிட்டு சென்றுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவுடன் ஒப்பந்தம்?
ஈழத் தமிழர்களை தங்கள் வயப்படுத்தி இந்தியாவை கண்காணிக்க சீனா, பாகிஸ்தான் தீவிரமாக இருக்கிறது. இதனை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரப் பகிர்வு பிரச்சனையில் ஈழத் தமிழர் தரப்பு, இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு தயாராகி வருகிறோம். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் தூதர் வருகை தந்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தடை?
இந்திய தரப்புடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். இலங்கையில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என இந்தியா நெருக்கடி தர வலியுறுத்தி உள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இப்போது இல்லை. ஆகையால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய மத்திய அரசு நீக்க வேண்டும். 35 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எங்களுடன் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. இவ்வாறு இ.கதிர் கூறினார்.












Click it and Unblock the Notifications