வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்ஷேக்களின் ராஜ்ஜியம்.. இலங்கையின் அடுத்த அதிபர் யார் தெரியுமா?
கொழும்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்பதாக ரணில் விக்கிரமசிங்கேவிடம் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே தெரிவித்ததன் மூலம் அவர் பதவி விலகுவது உறுதியாகி இருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

பொருளாதார நெருக்கடி
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ராஜபக்ஷே சொத்துக்கள்
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிபர் மாளிகை
இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதேபோல் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரதமர் ரணில் ராஜினாமா
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து இருக்கிறார். சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதிபர் பதவி விலக வேண்டும்
"அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும். அதிபட்சம் 30 நாட்கள் சபாநாயகர் (மகிந்த யபா அபேவர்தேனா) அதிபராக பதவி வகிக்க வேண்டும். அதன் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் ஒரு எம்.பியை அதிபராக தேர்வு செய்யும்." இடைக்கால அரசை அமைத்து தேர்தல்களை நடத்த வேண்டும்." என்ற முடிவுகள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த அதிபர்
இந்த நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிபருக்கு சபாநாயகர் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே வெளியே வரவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற தகவலும் மர்மமாகவே உள்ளது. முன்னதாக ரணில் விக்கிரமசிங்கேவிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பதவி விலக வேண்டும் என்ற முடிவையும் இடைக்கால அதிபராக, சபாநாயகர் மகிந்த யபா அபேவர்தேனாவை நியமிக்கும் முடிவையும் அவர் ஏற்பார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications