முகத்தில் தெளித்த சாரல்...
ஹைகூ என்பதற்குக் கிளிஞ்சல் என்று பொருள்.
ஒவ்வொரு கிளிஞ்சலிலும் கடலும் ஒளிந்திருக்கிறது-
கடல் பற்றிய எண்ணங்கள்-
கடலின் அனுபவங்கள்
கிளிஞ்சலின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
கிளிஞ்சல் - கடல் தள்ளிய அபரிமிதங்கள் - உபரிகள்.
கிளிஞ்சல் என்று அல்ல -
பனித்துளி கூட போதும்.
பிரபஞ்சத்தின் பிரதிநிதியாயிருக்க.
ஒரு கிளிஞ்சலை காதுக்குள் வைத்தால் கடலின் ஓசை தெரிவது போல
ஒரு ஹைகூவில் வாழ்வின் ஆழத்தை அறிந்துகொள்ளலாம்.
ஒரு குவளை நீர் போதும் - நதியின் சுவையை உணரலாம் -
ஒரு நதியையும் சுவைத்தபின் தான் முடிவெடுப்பது என்றால்
எப்படி முடியும்?
வசந்தம் கழிகிறது
பறவைகள் கத்துகின்றன - கண்ணீர்
மீன்களின் விழிகளில்
-பாஷோ
Spring passes
and the birds cry out tears
in the eyes of fishes
-Basho
என்கிற ஆங்கில வரிகளின் தமிழ் வார்ப்பு.
வசந்தம் போகிற போதெல்லாம்
வருத்தம் பறவைகளுக்கு வருகிறது - என
பாஷோ சொல்கிறார்.
நாமும் அப்படித்தான் நினைக்கிறோம் -
வறட்சி வரும்போது மிருகங்கள் வருந்தும் -
இலையுதிர் வரும்போது பறவைகள் அழும் -
என்றெல்லாம் நம் எண்ணத்தை அவற்றின் மூளையில் திணிக்க முற்படுகிறோம்.
வசந்தம் போவதற்கு அவை ஒருபோதும் வருந்துவதில்லை -
அவை இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றன.
வசந்தம் இருக்கும் இன்னொரு இடத்தை
அவற்றால் எளிதில் தேடிக் கொள்ள முடியும்.
இடம்விட்டு இடம் பெயர அவற்றால் முடியும்.
காற்றைக் கிழித்துக் கொண்டு -
பூமியின் சுழற்சியைப் புரிந்து கொண்டு -
பூமத்திய ரேகையில் தங்கள் முகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியை
அவற்றால் தேடிக் கொள்ள முடியும் -
பறந்து சாவது பயத்தால் சாவதிலும் உன்னதமென
பறவைகள் கருதுகின்றன.
மீன்களும் அழுவதில்லை -
ஒருவேளை அழுதால் அதை எப்படிக் கண்டுகொள்வது -
தண்ணீரிலிருந்து அவற்றின் கண்ணீரை மாத்திரம் எப்படி தரம் பிரிப்பது?
கவிஞனால் முடியும் -
அவன் கண்களுக்குள் பாலில் இருக்கும் வெண்ணெயும்,
விறகில் இருக்கும் நெருப்பும் தென்படுகின்றன.
பாஷோ நண்பர்களை விட்டுப் பிரிவதை
உருவகப்படுத்திப் பேசகிறார்.
நண்பர்கள் - வசந்தகாலமாய் இருக்கிறார்கள்
அவர்களைப் பிரிவது - அனைத்தையும் துயர நிலையில்
காட்சிப்படுத்துகிறது - பறவைகளையும், மீன்களையும்-
பறவைகள் போய்விட்டனவே என்று
மீன்கள் மகிழத் தானே வேண்டும் -
ஏனென்றால் பறவைகள் பறக்கும் போதெல்லாம்
மீன்களின் இதயத்துடிப்பு இரட்டிப்பாகுமே!
நீரின் மீது பறக்கும் போது
புறாக்களையும், கழுகுகளையும் அவை எப்படி
வேறுபடுத்திப் பார்க்க முடியும்?
ஆனாலும் பறவைகள் போகிறபோது மீன்கள் வருத்தப்படும் -
பறவைகள் இருக்கும் வரைதான்
மீன்களின் வாழ்க்கையில் சுவாரசியம் என்பதால்.
ஆபத்துகளுடன் வாழ்வதைத் தான்
ஒவ்வொரு உயிரினமும் நேசிக்கின்றது -
மனிதனைத் தவிர
கருங்கல்லால் கல்லறை கட்டப்படுவது கூட தப்பித்தவறி
எழுந்து வந்து விடக்கூடாது என்பதற்காகத்தானே!
மரணத்திலும் பாதுகாப்பு இல்லை
எனினும் மரணத்தையும் அலங்கரித்து காபந்து செய்கிறோம்
மரணம் ஒரே ஒரு நொடியில் நிகழ்வது-
அதற்காக மற்ற நொடிகளை ஏன் நொடிக்கச் செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications