பாரதி பக்கம்
பார்த்த னெழுந்துரை செய்வான் ; - இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும் புகழ் விஷ்ணு - எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழலானை ;
கார்த்தடங் கண்ணி எந்தேவி - அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை ;
போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் -ஹே!
பூதலமே! அந்தப் போதினில்! என்றான். (102)
35. பாஞ்சாலி சபதம்
தேவி திரவுபதி சொல்வாள் -ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன் ;
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
செய்யும்முன்னே முடியே னென்றுரைத்தாள் . (103)
ஓமென் றுரைத்தனர் தேவர் - ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமியதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்
பூமிப் படுத்திய தாஞ்சுழற் காற்று,
சாமி தருமன் புவிக்கே - என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைத்தும்!
நாமுங் கதையை முடித்தோம் - இந்த
நாளில் முற்றும் நல்லின் பத்தில் வாழ்க. (104)
பாஞ்சாலி சபதம் முற்றிற்று
(அடுத்து ஞானப்பாடல்கள்)