பாரதி பக்கம்
மார்ச் 28, 2001
சுயசரிதை
2. பாரதி -அறுபத்தாறு
கடவுள் வாழ்த்து - பராசக்தி துதி
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்:
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி:
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யலணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். (1)
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செல்வி தழ்ச்சி,
நீராகத் தனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்: நிலத்தின் மீது
போராக நேயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்: புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். (2)
மகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,
பாகார்ந்த தேமொழியாள், படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள், பரம சக்தி
ஆகார மளித்திடுவாள், அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,
சோகா டலிக்குமெனப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். (3)












Click it and Unblock the Notifications