பொன்விழா காணும் காபி ஹவுஸ்!
கேரளாவைச் சேர்ந்த தி இந்தியன் காபி ஹவுஸ் ஹோட்டல் குழுமம் பொன் விழா கண்டுள்ளது. தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஹோட்டல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் காபி ஹவுஸ் முதன் முதலில் கேரள மாநிலம் திருச்சூரில் 1958ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தொடங்கப்பட்டது. இதை தொடங்கி வைத்தவர், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன்.
இந்தியன் காபி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது. 2வது கிளை தலச்சேரியில் அதே ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி திறக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இவற்றின் கிளைகள் தொடங்கப்பட்ன. சென்னையிலும் இந்த ஹோட்டல் குழுமத்தின் கிளை தி.நகரில் உள்ளது.
தற்போது டெல்லி, மும்பை, புதுச்சேரி, பெங்களூர், நாக்பூர், லக்னோ, ஜபல்பூர் உள்ளிட்ட இடங்களிலும் இந்த ஹோட்டலின் கிளைகள் உள்ளன. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 100 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹோட்டலின் சிறப்பம்சமே, ஹோட்டல் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து இதை நடத்துவதுதான். தொழிலாளர்கள் அனைவருமே இதன் முதலாளிகளும் கூட.
பொன் விழாவை இந்தியன் காபி ஹவுஸ் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோழிக்கோட்டில் பொன் விழாக் கொண்டாட்டம் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்ணூரில் நிறைவு பெறுகிறது.
அடுத்த ஆண்டு ஏ.கே.கோபாலனின் நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications