சுட்டெரிக்கும் வெள்ளித் தி(தீ)ரை!
இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது!
சிங்கப்பூர் கேலாங் மேற்கு சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ்மொழி மையத்தில் முனைவர். ரத்தின வெங்கடேசன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக அரங்கேறியது.
"இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை"-ஆம், எனும் தலைப்பில் ஸ்டாலின் போஸ் தலைமையில் மணி சரவணன், கண்டனூர். சசிகுமாரும்,
இல்லை, எனும் தலைப்பில் இனியதாசன் தலைமையில் தமிழ்க்கோ, கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய இரு குழுக்கள் சொற்போரிட்டனர்.
இந்த சொற்போருக்கு நடுவர் பதவி வகிப்பது சற்று சிரமமான காரியம், எனினும், சொல்லருவி சிவக்குமார் அப்பதவிக்கு மிகச்சரியாகப் பொருந்தி நடுநிலை காத்தார்.
மேலும், இந்நாள்வரை அணித்தலைவராக அனல் வீசிக்கொண்டிருந்த அவர், முதல்முறையாக நடுவர் பதவி ஏற்கிறார் என்பது சிறப்பம்சமாகும்.
சமூகத்தின் பிரதிபலிப்பே திரைப்படம். ஆனால், இன்றையத் திரைப்படங்கள் அதை சரியாகத்தான் செய்கிறதா? இன்றும் தரமான சமூகப் பார்வையுடனான படங்கள் வந்துகொண்டு தானே இருக்கின்றன, இத்தகைய கேள்விகளுக்கும், பல சந்தேகங்களுக்கும், தெளிவான பதில்களை தங்களது சிறப்பான பேச்சுக்களால் எடுத்து வைத்தனர் பட்டிமன்ற பேச்சாளர்கள்.
பார்வையாளர்கள் அங்கத்தில் தமிழ்த்தொண்டர் புருஷோத்தமன் அவர்கள் புதியதாக பதவி வகித்த நடுவருக்கும், அணித்தலைவருக்கும் வாழ்த்துக்களையும், தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
ஓவ்வொருப் பேச்சாளரின் பேச்சுக்களையும் வரிசைப்படுத்தி, ஆய்ந்து தனது சிறப்புரையுடன், "இன்றையத் திரைப்படங்கள் இளையர்களை நல்வழிப்படுத்தவில்லை" - 'ஆம்' எனும் மிகச் சரியான தீர்ப்பை தனது அழகுத் தமிழில் பதியவைத்தார் நடுவர்.
தொடர்ந்து பேச்சாளர்களுக்கும், நடுவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. செவிக்கு சிறப்பான உணவை பரிமாறிய பட்டிமன்றம், கவிஞர். இறைமதியழகன் அவர்களின் அன்பான ஏற்பாட்டில் மிகச்சிறப்பான சிற்றுண்டியையும் பரிமாறியது
கோட்டை பிரபு ([email protected])