For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழில் பெயர் மாற்றம்: அவமானப்படுத்தும் அதிகாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

தமிழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பி அரசு அலுவலகத்திற்குச் செல்லும் தமிழ் உணர்வாளர்களை அரசு அதிகாரிகள் அவமானப்படுத்தி அனுப்பும் கொடுமை தமிழ்நாட்டில் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் கா. பாலமுருகன் அண்மையில் தனது பெயரை தூயத்தமிழில் தமிழ் வேங்கை என மாற்றி அமைத்துக் கொண்டார், அதோடு அவரது துணைவி மகேசுவரியும் தனது பெயரை மங்கையர்க்கரசி எனத் தமிழில் மாற்றி அமைத்துக் கொண்டார்.

இந்த பெயர்களை அரசு பதிவேட்டில் பதிவு செய்யும் பொருட்டு கடந்த ஆகஸ்டு 16-ஆம் நாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு எழுது பொருள் அச்சுத்துறை அலுவலகம் சென்று பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பம் கேட்டுள்ளார், அங்கிருந்த ஒரு ஊழியர் எதற்காகப் பெயரை தமிழில் மாற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

தான் விழுப்புரம் மாவட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவராக இருப்பதையும் தனது தமிழுணர்வின் காரணமாக தனது பெயரை தமிழில் மாற்ற விரும்புவதையும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் அந்த ஊழியர் ஒரு பதிவேட்டைக் காட்டி, இதில் உன்னைப் பற்றிய விவரங்களை எழுது, ஆனால் அதில் ஒரு எழுத்து கூட ஆங்கிலத்தில் எழுதாமல் எழுது பார்ப்போம் என கேலியாக கூறியுள்ளார்.

தோழர் பாலமுருகன் பொறுமையாக தனது முகவரியை தமிழில் எழுதி கையொப்பமிட்டிருக்கிறார், பிறகு அவருக்கு பெயர் மாற்ற விண்ணப்பத்தை அந்த ஊழியர் அளித்தார்.

தனது துணைவியின் பெயரையும் மாற்ற இருப்பதால் அதற்கு மற்றொரு விண்ணப்பத்தை தோழர் பாலமுருகன் கேட்டுள்ளார்.

உடனே அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர், ஏங்க தமிழ் தமிழ்னு விசயம் தெரியாம பெயர் மாற்றிக் கொள்ள வேண்டியது. அப்புறம் இங்கே வந்து கத்த வேண்டியது. யார் சொன்னா உங்களுக்கு இந்த ஐடியா எல்லாம். முதல்ல நீங்க இனிமே எங்கியுமே இங்கிலீசில் கையெழுத்துப் போட முடியாது தெரியுமா?

தமிழ் தமிழ்நாட்டுலதான் இருக்கு. உலகம் பூரா தமிழா இருக்கு? இங்கிலீஸ் தான இருக்குது? எப்படி வெளிநாடு போவீங்க உங்களுக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைக்கும், அங்க தமிழ்ல கையெழுத்துப் போட்டா செல்லாது. என்று பலவாறாக மிரட்டியுள்ளார்.

அதற்கு பாலமுருகன், ஏன் இப்படி தமிழில் பெயர் மாற்றம் செய்ய வருபவர்களை பயமுறுத்துகிறீர்கள்? இதுதான் உங்கள் வேலையா? இதை குறித்து நான் முதல்வரிடம் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண் ஊழியர், நீ மறுபடியும் இங்கு வந்துதான ஆகணும் என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளும் ஊழியர் களுமே தமிழுக்கு எதிராக இருக்கும் நிலை இருப்பது மிகுந்த வேதனையானது, அதோடு பொய்த் தகவல்களை கூறி மிரட்டுவது சட்ட விரோதமான ஒரு செயலாகும்.

சட்டப்படி கையெழுத்து என்பது ஒரு குறியீடே ஒழிய அது ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்பது அந்த ஊழியர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்தே மாற்றிச் சொல்கிறார்களா?.

உலகெங்கிலும் உள்ள மக்கள் தத்தம் தாய் மொழியிலேயே கையெழுத்து இடுகின்றனர், உலகம் முழுவதும் சுற்றுகின்றனர், தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர் உள்ள தமிழர்கள் யாரும் இது வரை வெளிநாடு சென்றதேயில்லையா?

அல்லது தமிழில் கையெழுத்திடு பவர்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடைப்பதேயில்லையா? அப்படி தமிழில் கையெழுத்து இருப்பதன் காரணமாக ஒருவருக்கு கடவுச்சீட்டு மறுக்கப்படுமானால் அது சட்ட விரோதமாகும்.

உண்மை நிலை இப்படி இருக்க தமிழக அரசு ஊழியர்களே இவ்வாறு தவறாக தகவல்கள் சொல்லி தமிழில் பெயர் மாற்ற வருபவர்களை மிரட்டுவது மோசமான செயலாகும், தமிழக முதல்வர் இதில் உடனே தலையிட்டு இனி இவ்வாறு நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(நன்றி-தென் செய்தி)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X