காஷ்மீரில் ஆசியாவின் மிகப் பெரிய துலிப் கார்டன்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கொள்ளை அழகுக்கு பெயர் போனது. பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள காஷ்மீருக்குப் புதுப் பெருமை சேர்ந்துள்ளது இந்த துலிப் தோட்டம்..
ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட துலிப் பூக்கள் தோட்டம், ஆசியாவிலேயே மிகப் பெரிய துலிப் தோட்டம் என்ற பெருமையைப்
பெற்றுள்ளது.
5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தோட்டம், தால் ஏரியின் எதிரே கண்ணைக் கவரும் வகையில் ஜொலி ஜொலிப்புடன் காணப்படுகிறது.
சபர்வான் மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த துலிப் தோட்டத்தில் மொத்தம் 12 லட்சம் துலிப் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த செடிகளில் தற்போது பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. அடுத்த சில நாட்களில் பூக்கள் அனைத்தும் பூத்து விடும் என்கிறார் மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் நாகாஷ்.
துலிப் தோட்டத்தில் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பழுப்பு நிறத்திலான பூக்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.
தொலைவிலிருந்து பார்க்கும்போது வானவில்லை, நேராக்கி படுக்க வைத்திருப்பது போல தோன்றுகிறது இந்த துலிப் பூக்கள் தோட்டம்.
இந்த துலிப் பூக்கள் தோட்டத்தில் நான்கு நீரூற்றுகள், சிமென்ட் நடைபாதைகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.
முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் கனவுத் திட்டம் இந்த தோட்டம். கடந்த ஆண்டே இந்தத் தோட்டம் ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தது.
இந்த அழகிய மலர்த் தோட்டத்திற்குள் சென்று பூக்களின் ரம்யத்தை அனுபவிக்க பெரியவர்களுக்கு தலைக்கு ரூ. 50ம், சிறியவர்களுக்கு தலைக்கு ரூ. 20ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது.