ஆளுநர் மாளிகையில் நட்சத்திர ராசி பூங்கா அமைப்பு

சென்னையின் மையப்பகுதியான கிண்டியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான அரிய வகை தாவரங்கள், மரங்கள் அடர்ந்த இயற்கை வனச்சூழலில் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது.
இதில் அழிந்து வரும் அரிய வகை மான் இனத்தைச் சேர்ந்த பிளாக் பக், சிங்காரா மற்றும் அல்பினோ, மங்கூஸ், குள்ளநரிகள் போன்ற விலங்குகளும், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான பறவை வகைகளும் இங்கு வசிக்கின்றன.
ஆளுநர் மாளிகைக்குள் அழகிய பரந்த புல்வெளி மற்றும் நீள்வட்ட புல்வெளி, வெள்ளிவிழா தோட்டமும் பராமரிக்கப்பட்டுவருகின்றன. பார்ப்பதற்கு கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இதயத்துக்கு ரம்மியமாகவும் இருக்கும்.
இந்த நிலையில் பிறந்தநாள் ராசியான 27 நட்சத்திரங்களுக்குத் தொடர்புடைய மரங்களை நட்டு பார்வையாளர்களை கவரும் புதிய நட்சத்திர தோட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி இன்று நடந்த நிகழ்ச்சியில் முதன்முதலாக, அவரது ராசிக்குரிய மரக்கன்றை நட்டு பர்னாலா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவரது மனைவி சுர்ஜித் கவுர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளுநரின் செயலர் சந்தீப் சக்ஸேனா மற்றும் ராஜ்பவன் அதிகாரிகள் தங்கள் ராசிக்குரிய மரக்கன்றுகளை நட்டனர்.
இதே போன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும் ஒரு நட்சத்திர பூங்கா உள்ளது. அதே வரிசையில் சென்னை ராஜ்பவனிலும் நட்சத்திரப் பூங்கா நிறுவப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications