கீழமாத்தூரில் பாண்டியர் கால திருமால் சிலை கண்டுபிடிப்பு
மதுரை அருகே உள்ள கீழமாத்தூரில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருமால் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்குதான் இந்த சிற்பம் கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவலை தொல்லியலாளர் குடவாயில் சுந்தரவேலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:
தேவாரப்பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் திருத்தலங்கள் 14ல் இதுவும் ஒன்று. சம்பந்தருக்கும், சமணர்களுக்கும் இடையே நடந்த போட்டியில் வைகை நதியில் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் ஏடு செல்லுகையில் மணி ஓசை கேட்ட இடமாக இவ்வூர் பற்றி கூறப்படுகிறது.
இத்தலப்புராணத்தைத் தழுவி இறைவனுக்கு மணிகண்டேசுவரர் என்ற பெயர் வழக்கிலுள்ளது. தெற்கில் இக்கோவிலை அடுத்து இதே வளாகத்தினுள் பாண்டி நாட்டு வழக்கப்படி நாராயணன் கோவிலும் அமைந்துள்ளன.
அண்மையில் மதுரை வைகை ஆற்றில் மணல் எடுக்கையில் இரண்டு அடி ஆழத்துக்கு கீழிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு சிற்பம் மணிகண்டேசுவரர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முற்காலப்பாண்டியர் சிற்பம், கலை நயத்தால் கண்களுக்கு விருந்து பயக்கும் அற்புத திருமால் சிலை இது. பின்புறம் உள்ளிட்ட நாலாபுறமும் செதுக்கி வேலை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.