தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர்: தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்துவரும் இளைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.
1.4.07 முதல் 31.3.08 இடைப்பட்ட காலத்தில் செய்த சமூக நலப்பணிகளுக்கான விருதுகள் இவ்வாண்டு வழங்கப்பட உள்ளது.
தகுதிகள்
இவ்விருதைப் பெற வயது வரம்பு 13 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் இன்றி தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் மீண்டும் விருது பெற இயலாது.
மத்திய, மாநில, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
தன்னார்வ தொண்டு நிறுவன தகுதிகள்: சங்க பதிவு சட்டப்படி பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். லாப நோக்குடன் தொண்டு செய்திருக்கக்கூடாது.
சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனம் விண்ணப்பிக்க இயலாது. சமூக நலப்பணிகளில் ஈடுபட்ட புகைப்படம், செய்திக்குறிப்பு இணைக்கப்பட வேண்டும்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 25 இளைஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம், பட்டயம், பதக்கம் வழங்கப்படும். தேர்வாகும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், பட்டயம், வெற்றிச் சின்னம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து திங்கள்கிழமைக்குள் (30.6.08) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9940341482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.