அடிப்படை வசதியில்லா தாயில்பட்டி நூலகம்
சிவகாசி: சிவகாசி அருகே எவ்வித வசதியும் இன்றி வாடகை கட்டிடத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. போதிய வசதிகளுடன் சொந்த கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சிவகாசியை அடுத்த தாயில்பட்டியில் கிளை நூலகம் உள்ளது. 15 ஆண்டுக்கும் மேலாக செயல்படும் இந்த நூலகம் இன்று வரை வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. மாவட்ட மைய நூலகத்தின் கீழ் செயல்படும் இந்த நூலகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
சிறிய கட்டிடத்தில் நூலகம் இயங்குவதால், ஆண், பெண்களுக்கு தனித்தனி இருக்கைகள் இல்லாத நிலை உள்ளது. நூலகத்தில் ஒரே நேரத்தில் 5 பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. கூடுதலாக இருக்கைகளை போடுவதற்கும் போதிய இடவசதி இல்லை.
இதனால் பல வாசகர்கள் நின்று கொண்டு படிக்கும் நிலையே நீடிக்கிறது. மேலும் புத்தகங்களை அடுக்கி வைக்க ஏராளமான அலமாரிகள் இருந்தும் இடப் பற்றாக்குறையால் அவை காட்சி பொருளாக நிற்கிறது.
இதுபோன்ற காரணங்களால் தாயில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இந்நூலகத்தைச் சரிவர பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்ற தாயில்பட்டி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நூலகத்துறை 5 ஆண்டுக்கு முன்பே ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இருப்பினும் நூலக கட்டிடத்திற்கு இடம் ஒதுக்காமல் வருவாய்த் துறையும் ஊராட்சி நிர்வாகமும் இழுத்தடித்ததால் இதுவரை சொந்த கட்டிடம் என்பது கனவாகவே உள்ளது.
தாயில்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் கூறுகையில், எங்கள் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் பாட சந்தேகங்களுக்கு, விளக்க உரைக்கு இந்நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இடப்பற்றாக்குறை உள்ளதால் தேவையான புத்தகங்களை தேடி எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நூல்நிலையம் இருந்தும் சரிவர பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications