முத்தமிழ்ச்சுவைச் சுற்ற திருவிழா
குடியாத்தம்: குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றத்தின் 3 நாள் தமிழ்த் திருவிழா இன்று தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை நடைபெறும் தொடக்க விழாவுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜி.ஒளிவண்ணன் தலைமை வகிக்கிறார். கேஎம்ஜி கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து, நெருப்பு வலம் வந்த நெருப்பு என்ற தலைப்பில் பழ. கருப்பையா பேசுகிறார். மாலை சுகவரிகள் முகவரிகள் ஆவதில் முன்னிற்பவை நாட்டுப் புறப்பாடல்களா அல்லது திரை இசைப் பாடல்களா என்ற தலைப்பில் அரங்க நெடுமாறன் தலைமையில் பண்பாட்டு மன்றம் நடைபெறுகிறது.
நாளை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆரணி ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் எ.எ. நடராஜன் தலைமை வகிக்கிறார். வைப்பு நிதி என்ற பொருளில் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர் பேசுகிறார்.
மாலை தி.மு. அப்துல்காதர் தலைமையில் வாரியாரின் வளர் புகழுக்குக் காரணம் நா அல்ல பேனாவே என்பது குற்றம் என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. இரவு அல்லவை தேயவும், அறம் பெருகவும் பெரிதும் தேவை தெளிவா அல்லது துணிவா என்ற தலைப்பில் பேராசிரியர் பெரியார்தாசன் தலைமையில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை இதழ்ப் பூக்கள் என்ற பொருளில் புலவர் ரெ.சண்முகவடிவேலும், இரவு தமிழோடு வாழ்வோம் என்ற தலைப்பில் நெல்லை கண்ணனும் உரை நிகழ்த்துகின்றனர்.
விழா ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் புலவர் வே.பதுமனார், நிர்வாகிகள் டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, டாக்டர் கே.எம். கணேசன், புலவர் ச.தண்டபாணி, ஏ.ஜி.ஆறுமுக முதலியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications