பான்யன் நிறுவனர்களுக்கு விருது
2007ம் ஆண்டுக்கான விருது இது. ஸ்ரீராம் இலக்கிய கழகம் ஆண்டு தோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் அறம் விருது.
2007 ஆம் ஆண்டுக்கான அறம் விருதினை பான்யன் அறக்கட்டளையின் நிறுவனர்கள் வந்தனா, வைஷ்ணவி ஆகியோர் பெறுகின்றனர்.
செப்டம்பர் 1ம் தேதியன்று மாலை 6 மணியளவில் நாரதகான சபாவில் நடைபெறும் விழாவில் சட்டீஸ்கர் மாநில ஆளுநர் நரசிம்மன் விருதினை வழங்குகிறார்.
இந்த விழாவில் மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்குகிறார்.
இது குறித்து ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் செயல் நெறி தலைவர் ராமன், இலக்கிய கழகத்தின் திருக்குறள் விழாக் குழு தலைவர் அவ்வை நடராஜன், உறுப்பினர்கள் ரங்காராவ், சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீராம் குழும இயக்குனர் கண்ணன் ஆகியோர் செய்தியாளர்கள் கூறுகையில், 1988-ம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் திருக்குறள் போட்டிகளை நடத்தி வருகிறது. திருக்குறள் வழி நடப்போருக்கு அறம் விருது வழங்கப்படுகிறது.
ஒரு லட்சம் ரொக்கப் பரிசினை உள்ளடக்கியது இந்த விருது. 2003 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
இது வரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் நிறுவனர் வேங்கடசாமி, தானம் அறக்கட்டளை நிறுவனர் வாசிமலை, காந்தி கிராம அறக் கட்டளை அறங்காவலர் கௌசல்யா தேவி, குத்தப்பாக்கம் கிராம தன்னாட்சி அறக்கட்டளை தலைவர் இளங்கோ ஆகியோருக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மன நலம் குன்றியவர்களுக்கு அடைக்கலம் தந்து, அவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்துடன் திகழும் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு வருகிறது பான்யன் என்பது குறிப்பிடத்தக்கது.