சேவைக்கு சிறந்த உதாரணம் பெரியசாமி தூரன்: பொள்ளாச்சி மகாலிங்கம்

கவிஞர் பெரியசாமி தூரனின் நூற்றாண்டு விழா, கோவையில் நடைபெற்று வருகிறது. சாகித்ய அகடமியும் பாரதிய வித்யா பவனின் கோவை மையமும் இணைந்து இவ்விழாவை நடத்துகின்றன.
இதில் நேற்று 2வது நாள் விழா நடந்தது. அப்போது, தூரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும், தொண்டில் கனிந்த தூரன் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிலம்பொலி செல்லப்பன் வெளியிட, சுவாமி நிர்மாலேஷானந்தா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் 'அருட்செல்வர்' பொள்ளாச்சி நா.மகாலிங்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பல துறைகளில், சிறந்து விளங்கிய பெரியசாமி தூரன், துணைவேந்தர் ஆகும் தகுதியையும் பெற்றிருந்தார்.
தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியராக, நிர்வாகியாக திகழ்ந்தவர். அவரது புகழை பிறரும் அறியச் செய்ய, "தொண்டில் கனிந்த தூரன்'' எனும் நூலை பள்ளிகளுக்கு வழங்கலாம், உறவினர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.
சேவை செய்பவரின் பெயரை ஏழு தலைமுறையும் நினைவில் கொள்ளும் என்பதை இவரது வாழ்வில் இருந்து அறியலாம். பாரதியார் குறித்து தூரன் எழுதிய நூல்களை வெளியிட சக்தி குழுமம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
நூல் ஆசிரியர் சிற்பி பாலசுப்ரமணியன் பேசுகையில், பெரியசாமி தூரனின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் மத்தியில் பதிய வைக்க வேண்டிய வரலாறு. தமிழ் மொழிக்கு 25,000புதிய கலைச் சொற்களை 10 தொகுதிகளாக உருவாக்கியவர். ஒவ்வொரு தொகுதியும் ஒரு டாக்டர் பட்டம் பெற தகுதியானது என்றார்.
பாரதிய வித்யா பவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் சண்முகானந்தம், சாகித்ய அகடமி சென்னை அலுவலக பொறுப்பாளர் ஜிதேந்திரநாத் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications