Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முனைவர் முரசு. நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

Murasu Nedumaran
-முனைவர் மு.இளங்கோவன்

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகச் சென்றமுறை பொறுப்பேற்ற பொழுது பாவேந்தர் பாரதிதாசன் விருதை மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களுக்கு அறிவித்தார்.அப்பொழுது உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் தமிழக அரசு இதற்குமுன் அறிவித்த பரிசுகள் யாவும் தமிழகத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது.

'வடவேங்கடம் தென்குமரி'க்கு இடையில் தமிழர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் இனமாகத் தமிழ் இனம் உள்ளது என்பதைக் கலைஞர் அவர்கள் புரிந்துகொண்டு பரிசு வழங்கியது பாராட்டுக்கு உரியது. அதுநாள்முதல் தமிழக அரசின் தமிழ் சார்ந்த செயல்பாடுகள், பரிசுகள், அறிவிப்புகள் யாவும் உலகத் தமிழர்களை மனத்தில்கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது வரலாறு.

தமிழகத்தைவிட்டு அயல்நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் தாய்த் தமிழகத்தினைக் கல்வி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்து இலக்கியப் போக்குகளை, தமிழ் அறிஞர்களை அறிந்து தத்தம் நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆனால் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் படைக்கும் இலக்கியங்களை, அவர்கள் செய்யும் ஆய்வுகளை நாம் அறிய வாய்ப்பில்லாமல் பலகாலம் இருந்தோம். ஆனால் ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வுக்குப் பின்னும், கணிப்பொறி, இணையப் பயன் பாட்டிற்குப் பிறகும் அயல்நாட்டு இலக்கியங்களை அறியும் போக்கு தமிழகத்தில் தொடங்கி விட்டது.

அயல் நாட்டு அறிஞர்கள் தமிழகத்திற்கு வருவதும், தமிழகத்து அறிஞர்கள் அயல் நாட்டினருடன் தொடர்பு கொள்வதும் இன்று எளிதாகிவிட்டதால் அயலகத்தமிழ் பற்றி இன்று அறியமுடிகிறது. அயலகத்தமிழ் இலக்கியங்கள் தமிழகத்தில் பாடநூல்களாக இடம்பெற்று வருகின்றன. அயல்நாட்டு அறிஞர்கள் தங்கள் நாட்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ள போக்குகளை நூல்கள், இதழ்கள், இணையும் வழியாக நமக்குத் தெரிவித்ததால் அந்நாட்டு இலக்கிய வளர்ச்சியை அறிந்து மகிழமுடிகிறது. அவ்வகையில் மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களின் வழியாக உருவான மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம் மலேசிய நாட்டின் இலக்கியப்போக்கை நமக்கு எடுத்துரைக்கிறது. மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலும், இலக்கிய வளர்ச்சியிலும், மலேசிய இலக்கியங்களை அறிமுகம் செய்வதிலும் முன்னிற்கும் முரசு நெடுமாறன் அவர்களின் வாழ்க்கையை இங்கு அறிமுகம் செய்கிறோம்.

முரசு நெடுமாறன் அவர்கள் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் உள்ள 'கேரி தீவில்' 14.01.1937 இல் பிறந்தார். பெற்றோர் (இ)ராசகிள்ளி சுப்புராயன்-முனியம்மை. இவரின் இயற்பெயர் கணேசன் ஆகும். தமிழார்வம் வரப் பெற்றதும் நெடுமாறன் என மாற்றிக் கொண்டார். ஆவணங்களிலும் இவ்வாறு பதிவானது. முரசு என்பது பெற்றோர்களின் பெயர்ச் சுருக்கம் ஆகும். மேலும் தம் படைப்புகளைப் போற்றி வெளியிட்ட தமிழ்முரசு இதழின் நினைவாகவும் முரசு இடம் பெறலாயிற்று. இயற்பெயரும் புனைபெயரும் மறைந்து முரசு என்ற பெயரே இன்று உலக அளவில் தெரியலாயிற்று.

முரசு நெடுமாறனின் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தவர்கள். எனவே முரசு தாம்பிறந்த 'கேரி தீவில்' தொடக்கக் கல்வியைப் பெற்றார்.இவர் பயின்ற இடம் பள்ளிக்கூடம் என்று சொல்ல முடியாதபடி குழந்தைகள் காப்பகமாகவும், கோயிலாகவும் இருந்தது. பின்பு சாதாரண தனிக்கட்டடமாக இருந்தது. பின்னர் கிள்ளானில் உயர்நிலைக்கல்வி பெற்றார். தனிப்பட்டமுறையில் பயின்று தமிழ் ஏழாம்வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஏழாம்வகுப்பு என்பது அக்காலத்தில் ஆசிரியர் பணிபுரிவதற்குரிய ஆயத்தக் கல்வியாகும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆவதற்குரிய கல்வி பெற்றிருந்தும் ஆசிரியர் பணி இவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் கற்றிருந்த தையற்கலைத் தொழில் இவருக்குக் கை கொடுத்தது.

தையற்கலைத் தொழிலால் வாழ்க்கை நடத்திய முரசு அவர்களுக்கு 1963 இல் ஒரு பொற் காலத்திற்கான கோட்டைக்கதவு திறக்கப்பட்டது. ஆம்!. தற்காலிக ஆசிரியர் பணிபுரியலனார். 1973-1976 காலகட்டங்களில் விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றுத்தகுதி மிக்க ஆசிரியர் ஆனார். அக்காலத்தில் மலாய், ஆங்கிலக் கல்வியில் ஈடுபட்டுச் சொந்த முயற்சியாலும், சிறப்புப் பயிற்சியாலும் மூன்றாம் படிவத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ஐந்தாம் படிவத்தில் தேர்வு எழுதிப் பொது நிலை தேர்ச்சி பெற்றார். பின்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி வழியாக இலக்கிய இளவல்(பி.லிட்), முதுகலை(எம்.ஏ) பட்டங்களையும் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் முனைவர் பட்டத்தினைப்(1994-2002) பெற்றவர்.

முரசு அவர்கள் தற்காலிக ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி,பின்பு தகுதி பெற்ற ஆசிரியராக விளங்கி 1992 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு ஒப்பந்த ஆசிரியராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.

முரசு ஆசிரியர் பணியில் இருந்த காலகட்டத்தில் மலேசியக் கல்வித்துறையில் பல புதிய உத்தி முறைகளைப் பின்பற்றித் தமிழ் கற்றலை எளிமைப்படுத்தினார். இதனால் மாணவர்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியரானார்.1980 இல் புதி பாடத்திட்டம் மலேசியாவில் நடைமுறைக்கு வந்தபொழுது இவரின் கல்வி நடவடிக்கைகள், அணுகுமுறைகள் அதில் இடம்பெற்றன. மலேசியக்கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் முதலான பல துறையினரும் இவர்தம் கல்விப் புலமையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

1996 இல் கல்வி ஒலிபரப்புத்துறையில் பள்ளி ஒலிபரப்புத் தொடங்கியபொழுது இத்துறையில் பகுதிநேரக் கலைஞராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் அவ் ஒலிபரப்பு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுதியா இசைப்பாடல்கள் எழுதி(ஏறத்தாழ 600) மாணவர்களுக்கு இசைவழியாகக் கல்வியார்வம் ஊட்டியவர்.

முரசு நெடுமாறன் மலேசியாவில் ஆசிரியர் பணி புரிந்ததுடன் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தில் பயிலரங்குகள், பாடத்திட்டங்கள், கருத்தரங்குகள்,ஆய்வு அரங்குகள் போன்றவற்றில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் பணிபுரிந்தவர். முரசு நெடுமாறனின் தமிழ் இலக்கியப் பணியை மதிக்கும் வகையில் சென்னையில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் இவரை வருகைதரு பேராசிரியராக(2001-02) அமர்த்திப் பெருமை செய்தது. மலேசியாவில் புத்ரா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

முரசு நெடுமாறன் அவர்கள் பொதுத்தொண்டு புரிவதில் மிக்க ஈடுபாடு உடையவர். பல்வேறு அமைப்புகளில் இடம்பெற்றுத் திறம்படப் பணிகள் செய்தவர். தாம் வாழ்ந்த 'கேரி தீவு' பகுதியில் தம் பதினாறாம் அகவையில் செய்த தொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். தோட்டங்களில் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் நாடகங்களில் முரசு பங்குகொண்டவர். இதனால் இவருக்குச் செல்வாக்கும் மதிப்பும் கூடியது. இவரின் தொழிற்சங்க ஈடுபாட்டால் தோட்டத்தொழில் நிருவாகத்திற்கு இவர்மேல் வெறுப்பு ஏற்பட்டது.

எனவே இவர் தந்தையார் பார்த்த கங்காணி வேலையை இழக்கவேண்டியதானது. இவரும் தோட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பும் வந்ததுஆனால் நல்ல உள்ளம் படைத்த சிலரால் முரசு அங்கேயே பணியாற்றும் நிலை ஏற்பட்டது. தமக்குப் பாதுகாப்பாகவும் மக்கள் தொண்டு செய்ய வாய்ப்பாகவும் முரசு ம.இ.கா. என்னும் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவரின் அரசியல் ஈடுபாட்டை மேனாள் அமைச்சர் மாணிக்கவாசகம் அவர்கள் பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார்.

முரசு நெடுமாறன் நல்ல கலை உணர்வு உடையவர். இவரின் தாத்தா திரு.மாரிமுத்து அவர்கள் (பெரிய கங்காணி) அனைவராலும் மதிக்கப்பட தெருக்கூத்துக் கலைஞர். (முரசுவின் முன்னோர்கள் தெருக்கூத்துக்குப் புகழ் பெற்ற உத்திரமேரூர் பகுதியிலிருந்து சென்றவர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.) இவருக்குக் கீழ் ஒரு நாடகக் குழு இருந்தது.தாத்தா வழியாக முரசு பாடல் பாடுவது, நடிப்பது போன்ற கலைகளைக் கைவரப்பெற்றார். நல்ல தங்காள் கதை, ஏணி ஏற்றம் போன்ற இசை நாடகங்களையும் இவர் வழியாக முரசு பெற்றார். முரசு தோட்டப்புறங்களில் பல நாடகங்களை அரங்கேற்றியது போல் -ஆசிரியர் பணியாற்றும் காலங்களிலும் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

முரசு நெடுமாறன் நல்ல படைப்பாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர்.பல நூல்களை எழுதி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தந்துள்ளார்.மலேசியநாட்டில் வெளியிடப்பட்ட தமிழ் தொடக்க, இடைநிலைப் பள்ளிப்பாட நூல்களில் இவர் படைப்புகள் பல இடம்பெற்றுள்ளன. சிறுவர் பாடல்கள், நாடகம், கதை, கட்டுரை போன்ற துறைகளில் இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் என்னும் பெயரில் இவர் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து உருவாக்கியுள்ள பெருங்களஞ்சியம் இவருக்கு உலக அளவில் நிலைத்த புகழைத் தந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+