பரிதிமாற் கலைஞர் பிறந்த தின விழா
மதுரை: தமிழை உயர் தனிச் செம்மொழி என்று 1902-லேயே வலியுறுத்திச் சொன்ன பதிமாற் கலைஞரின் 139 வது பிறந்த தினவிழா விளாச்சேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்றது.
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க. அவைத் தலைவருமான கோ.தளபதி தலைமை தாங்கி மாலை அணிவித்தார். விழா ஒருங்கிணைப்பாளர் விளாச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் மரகதவல்லி சாம்பசிவம் வரவேற்புரை ஆற்றினார்.
பரிதிமாற் கலைஞரின் பேரன்கள் வி.எஸ் கோவிந்தன், வி.எஸ். சூரிய நாராயணன், ஊராட்சி துணைத் தலைவர் அருளானந்தம் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவருமான ரா.சொக்கலிங்கம் பரிதிமாற் கலைஞரின் தமிழ்பணிகள் குறித்துப் பேசினார்.
நினைவு இல்ல காப்பாளர் நியமித்திடவும், அரசு விழா கொண்டாடவும், அவர் பெயரால் செம்மொழி விருது வழங்கிடவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
சிவக்கண்ணன், தாம்பிராஸ் பொதுச் செயலாளர் இல. அமுதன், திருநகர் தலைவர் இந்திர காந்தி, தியாக தீபம் அ.பாலு, வளம் சொசைட்டி ரெ. கார்த்திரேயன், மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமலை, திருநகர் சித்தி விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.