தீவிரவாதத்தால் உயிர்களின் அருமை புரிந்து விவாகரத்தை ரத்து செய்த ஜோடி

மும்பையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி பிரஷாந்த் மங்கேஷ்கர் மற்றும் டிலு மங்கேஷ்கர். இருவருக்கும் 21 வயதில் கலிந்தா என்ற மகள் உள்ளார். இந்த டாக்டர் தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தங்களது மகளின் வற்புறுத்தலின் பேரில், தாஜ் ஹோட்டலில் நடந்த நண்பர் ஒருவரின் விருந்துக்கு மகளுடன் இணைந்து சென்றனர்.
அப்போதுதான் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கிக் கொண்டனர். பின்னர் நடந்ததை டாக்டர் தம்பதியினரே விளக்குகின்றனர்.
டிலு மங்கேஷ்கர் - ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் அங்கு வந்த ஹோட்டல் ஊழியர், அனைவரும் ஓடுங்கள் என்று கூக்குரலிட்டார்.
நான் ஒரு கையில் எனது மகளைப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினேன். அப்போது எங்களைப் போல பலரும் ஓடினர். அந்த சமயத்தி்ல எங்களை நோக்கி தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். அதிர்ஷ்டவசமாக எங்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயவில்லை.
ஆனால் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவரின் உடலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் சுருண்டு விழுந்தார்.
இதற்கு மேலும் ஓடினால் ஆபத்து என்பதால் அப்படியே கீழே படுத்து விட்டோம். எங்களுடன் ஓடியவர்களையும் கீழே படுக்குமாறு கூறினேன்.
அது மிகவும் சோதனையான நேரம். அப்போது மணி நள்ளிரவு 1.30. இனிமேலும் உயிருடன் தப்ப முடியுமா என்பதில் எனக்கும், எனது கணவர், மகளுக்கும் சந்தேகம் வந்து விட்டது.
தப்ப முடியாவிட்டாலும் பரவாயில்லை. காயமடைந்தவர்களுக்கு நம்மால் ஆன சிகிச்சையை செய்யலாமே என்று நானும் எனது கணவரும் முடிவெடுத்தோம்.
எங்களுக்குப் பின்னால் குண்டடிபட்டு விழுந்தவரை பரிசோதித்தோம். அவரது வயிற்றில் குண்டு பாய்ந்திருந்தது. கையில் கிளவுஸ் கூட இல்லாத நிலையில், நாங்கள் மருத்துவம் பார்க்க இறங்கினோம்.
வெறும் கைகளால் வயிற்றை துணியைக் கொண்டு கட்டி ரத்தப் பெருக்கை தடுத்து நிறுத்தினோம். எங்களுக்கு அருகில் படுத்திருந்த ஒரு வெளிநாட்டுக்காரர் வைத்திருந்த பெயின் கில்லர் மருந்து எங்களுக்கு உதவியது என்றார் டிலு.
இந்த சம்பவம், விவாகரத்து செய்ய முடிவெடுத்திருந்த அவர்களது மனதையும் மாற்றிப் போட்டு விட்டது. உயிரின் அருமையும், சேர்ந்திருப்பதின் மகத்துவத்தையும் உணர்ந்த அவர்கள் விவாகரத்து திட்டத்தை ரத்து செய்து விட்டார்களாம்.
டாக்டர் பிரஷாந்த் மங்கேஷ்கர் இதுகுறித்து கூறுகையில், எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மன விரக்தியுடன் இருந்தோம். விவாகரத்து செய்யவும் தீர்மானித்து விண்ணப்பித்தும் விட்டோம்.
ஆனால் தாஜ் ஹோட்டலில் நடந்த அந்த துயரமான அனுபவம், எங்களுக்கு வாழ்க்கை மற்றும் உயிரின் அருமையை உணர்த்தி விட்டது. இருவரும் இணைந்திருக்க வேண்டியதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் பிரிய மாட்டோம் என்றார் கண்களில் கண்ணீர் ததும்ப.












Click it and Unblock the Notifications