அமெரிக்கா-இங்கிலாந்தில் தமிழிசை நிகழ்ச்சிகள்-ராமதாஸ்
பொங்கு தமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் 6ம் ஆண்டு விழா, பண்ணிசை பெருவிழா ஆகியவை சர் பிடி தியாகராயர் அரங்கத்தில் நடந்தது. இதையொட்டி, தேவாரம், திருவாசகம், காவடிச்சிந்து போன்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் நிறைவு விழாவில் பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
இரண்டு நாட்கள் நடைபெற்ற பொங்கு தமிழ் இசை விழாவில், மக்கள் இசை மழையில் நனைந்தனர். ஆனால் இப்படிப்பட்ட இசை விழாவை ரசிப்பதற்கு மக்கள் பக்குவப்படவில்லை.
பாரதியார் பாடல்கள், குற்றால குறவஞ்சி, அண்ணாமலையார் பாடல்கள் பாடுவதற்கும், படிப்பதற்கும் மிகவும் சுலபமானதாகும். பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் இசையை கட்டாயப் பாடமாக்கி கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் கணிதத்தில் 20 மார்க் எடுத்தாலும் இசையில் 100க்கு 50 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வர வேண்டும்.
தமிழ் இசையை பெண்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் கற்றுக்கொண்டால் தான் குழந்தைகளுக்குக் கற்று கொடுக்க முடியும். திருமண விழாக்களில் அழகான தமிழ் இசைப்பாடல்களை பாட வேண்டும்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும். ஆங்கிலத்தையும் சேர்த்து கற்று கொடுக்கலாம்.
தமிழ் இசை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். தமிழில் இருப்பது போல் தேவாரம், திருவாசகம் பாடல்கள் வேறு எந்த மொழியிலும் கிடையாது.
இசையை கற்றுக் கொடுத்தால் சமூகச்சில் வன்முறை குறைந்து அமைதி ஏற்படும்.
அடுத்த ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில் லண்டன், அமெரிக்கா நாடுகளுக்கு சென்று பொங்கு தமிழ் பண்ணிசை பெருவிழா நடத்தி, அங்குள்ள ஆங்கிலேயர்களுக்கு தமிழிசையை அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.