மறக்க முடியாத-2008
மார்ச்:
1 - எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் மனைவியை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
2 - சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.
4 - தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
5 - கர்நாடக முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
6 - கிளிநொச்சியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழ் எம்.பி. சிவநேசன் கொல்லப்பட்டார்.
7 - பாமகவுக்கு ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்க இயலாது என்பதை முதல்வர் கருணாநிதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
8 - மலேசிய பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்கு பெரும் அடி கிடைத்தது. சாதாரணப் பெரும்பான்மையுடன் அது வெற்றி பெற்றது. 8 முறை தொடர்ந்து வென்ற டத்தோ சாமிவேலு தோல்வி அடைந்தார்.
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து, கொழும்புக்கு பெண் பைலட்டுகள், ஊழியைகள் இடம் பெற்ற விமானம் இயக்கப்பட்டது.
9 - உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில், வன்னிய கிருஸ்துவர்களுக்கும், தலித் கிருஸ்துவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள்.
- டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் அலுவலகத்தின் மீது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.
- கண்டியில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சி மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டது.
- விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும், நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
10 - மலேசிய பிரதமராக 2வது முறையாக அப்துல்லா அகமது படாவி பதவியேற்றார்.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.
11 - போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை புளோரா கைது செய்யப்பட்டார்.
14 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிக காலம் நீடிக்கும் புதிய சாதனையையும் படைத்தார்.
- ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
- ஆசிப் அலி சர்தாரி மீதான கடைசி ஊழல் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
- இந்தியாவின் முதலாவது க்ரீன்பீல்டு விமான நிலையம் என்ற பெருமையைக் கொண்ட புதிய ஹைதராபாத் விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஷாம்ஷாபாத்தில் தொடங்கி வைத்தார்.
- அஜீத், ஷாலினி மகளுக்கு அனோஷ்கா என பெயர் சூட்டப்பட்டது.
15 - வக்கீல் ஜோதி அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தார்.
16 - ஓகனேக்கலில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
- அகில இந்திய முஸ்லீம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம், புதிய விவாகரத்து வழிமுறைகள் அடங்கிய 'ஷரியத் நிக்கநாமா'வை அறிவித்தது.
- இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான அனுரா பண்டாரநாயகே மரணமடைந்தார்.
17 - மலேசிய அமைச்சரவையில், 4 தமிழர்கள் இடம் பெற்றனர்.
- அமெரிக்கா செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக கைதான நடிகை புளோராவுக்கு ஜாமீன் கிடைத்தது.
19 - திமுகவின் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸின் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், அதிமுகவின் பாலகங்கா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- நடிகர் ரகுவரன் மரணமடைந்தார்.
- பாகிஸ்தானின் முதல் பெண் சபாநாயகராக பாமிதா மிர்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிரபல அறிவியல் நாவலாசிரியர் ஆர்தர் கிளார்க் உடல் நலக்குறைவினால் இலங்கையில் காலமானார்.
- வேலூர் சிறையில் நளினியை பிரியங்கா ரகசியமாக சந்தித்துப் பேசினார்.
20 - நடிகர் சோபன்பாபு மரணமடைந்தார்.
22 - திரைப்பட வசனகர்த்தா என்.பிரசன்ன குமார் புற்று நோயால் மரணமடைந்தார்.
23 - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் முன்னாள் மனைவி செசிலியா சிகானர் அல்பெனிஸ், மொராக்கோவைச் சேர்ந்த தனது காதலரை நியூயார்க்கில் திருமணம் செய்து கொண்டார்.
25 - மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்தார்.
- பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி பதவியேற்றுக் கொண்டார்.
- அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
26 - முதல்வர் கருணாநிதி கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 - சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சென்னை அருகே உள்ள கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
29 - தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை சேர்ந்து புதுக் கூட்டணியை அறிவித்தன.
- டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் 10,000 ரன்களைக் கடந்தார்.
- முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையானார். அவரது மனைவி ரித்துவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
30 - பிரபல முருகன் இட்லி கடை நிறுவனத்தின் சென்னை, திருச்சி, மதுரை நகர்களில் உள்ள கடைகள், உரிமையாளரின் இருப்பிடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
31- ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.
ஏப்ரல்:
3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4 - ஓகனேக்கல் விவகாரத்தில் கன்னட அமைப்பினரின் போராட்டத்தைக் கண்டித்து சென்னையில் நடிகர், நடிகைகள் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
6 - இலங்கையில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ படுகொலை.
16 - சென்னையில், சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்ட பழனிச்சாமியும், அவரது காதல் மனைவி டாக்டர் திவ்யாவும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
17 - முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
23 - திருவள்ளூர் அருகே தடுப்பூசி போட்ட 4 குழந்தைகள் பலியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 - இசையமைப்பாளர் இமான் - மோனிகா திருமணம் நடந்தது.
25 - அரசு ஆணைகளி்ல் இனி திருவள்ளுவர் ஆண்டையே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
மே:
1 - பிரபல காந்தியவாதியும், சமூக சேவகியுமான நிர்மலா தேஷ்பாண்டே மரணமடைந்தார்.
2 - இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது பாகிஸ்தான் அரசு.
- தமிழகத்தை உலுக்கிய பல கோடி ரூபாய் தங்கக் காசு மோசடி தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5 - மியான்மரை நர்கீஸ் புயல் தாக்கியது. 1 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
8 - தா.கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
- சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
13 - ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் உயிரிழந்தனர்.
14 - ஊழல் வழக்கில் சிக்கிய உறவினருக்காக சிபாரிசு செய்து மாட்டிக் கொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ராஜினாமா செய்தார்.
18 - தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் விஷச் சாராயம் சாப்பிட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
30 - தென் மாநிலங்களில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தில் பாஜகவின் எதியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ஜூன்:
2 - தமிழ ஹோட்டல்களில் உணவுப் பண்டங்களின் விலை குறைக்கப்படுவதாக அருச அறிவித்தது. ஆனால் இந்த விலைக் குறைப்பு இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விட்டது.
4 - எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
9 - பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து துரத்தப்பட்ட நடிகர் கார்த்திக், அகில இந்திய நாடாளும் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
10 - மத்திய அரசின் சிறந்த நடிகைக்கான விருது பிரியாமணிக்கு அறிவிக்கப்பட்டது.
13 - திமுக கூட்டணியிலிருந்து பாமகவை உடனடியாக விலக்க வேண்டும் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பரபரப்பு கோரிக்கையை வைத்தார்.
17 - திமுக கூட்டணியிலிருந்து பாமக விலக்கப்படுவதாக திமுகவின் உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அதை முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
21 - மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை உ.பி. முதல்வர் மாயாவதி விலக்கிக் கொண்டார்.
25 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணமடைந்தார்.
26 - முன்னாள் ராணுவத் தளதி பீல்ட் மார்ஷல் மானெக்ஷா மரணமடைந்தார்.
ஜூலை:
7 - காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. 41 பேர் பலியானார்கள்.
- குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகியது.
- தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு நியமிக்கப்பட்டார்.
8 - ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர்.
12 - வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது.
15 - சத்துணவுடன் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
17 - தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் சிக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
19 - இலங்கை கடற்படையைக் கண்டித்து சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம். கருணாநிதி தொடங்கி வைத்தார்.
22 - பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது (275-256)
- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுப் போடாமல் இருக்க ரூ. 1 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பாஜக எம்.பிக்கள் மூன்று பேர் லோக்சபாவில் பணக் கட்டுக்களைக் கொட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
23 - லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
- எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மதிமுகவை விட்டு நீக்கப்படுவதாக கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
25 - பெங்களூரில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு. ஒரு பெண் பலி, பலர் படுகாயம்.
26 - அகமதாபாத்தில் 14 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு. 55 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்.
27 - சென்னை, மதுரை, நெல்லையைத் தகர்க்கும் திட்டத்துடன் இருந்த அப்துல் கபூர் நெல்லையில் கைதானார்.
31 - கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று கூறியதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை குசேலன் உள்ளிட்ட ரஜினி படங்களை திரையிட தடை விதிக்கப்படுவதாக கன்னட அமைப்புகள் அறிவித்தன. தனது பேச்சுக்கு ரஜினி வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து தடை விலக்கப்பட்டது.
ஆகஸ்ட்:
1 - இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஒப்புதல் அளித்தது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மரணமடைந்தார்.
- தமிழகத்தின் 9வது மாநகராட்சியானது வேலூர்.
5 - தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தூத்துக்குடி உருவானது.
7 - ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா டிஸ்மிஸ் ஆனார்.
12 - அமர்நாத் நில விவகாரம் பெரும் கலவரமாக மாறியது. ஜம்மு ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியானார்கள்.
25 - தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மாநிலத்தையே உலுக்கியது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- ஒரிசாவின் காந்தமாலில் பயங்கர வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். சர்ச்சுகள், கிறிஸ்தவ பள்ளிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
27 - ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் பதவியேற்றார்.
28 - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விலகினார். புதிய முதல்வராக வைத்திலிங்கம் தேர்வானார்.
செப்டம்பர்:
1 - சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 2 ஊழியர்கள் மரணமடைந்தனர்.
5 - சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
6 - பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார்.
- இந்தியாவின் அணு வர்த்தகத்தை அங்கீகரித்து அணு எரிபொருள் சப்ளை நாடுகள் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. இந்தியாவின் அணுத் தனிமை முடிவுக்கு வந்தது.
7 - விஜயன் கொலை வழக்கில், சுதாவின் தங்கை பானுமதி உள்ளிட்டோர் கைது.
8 - வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் மரணமடைந்தார்.
10 - 6வது முறையாக அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
13 - டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.
15 - ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
23 - விபத்தில் மூளை மரணமடைந்த மாணவர் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்து அவரது பெற்றோர் தமிழகத்தையே நெகிழ வைத்தனர். தமிழகத்தில் அதிகரித்துள்ள உறுப்பு தானத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு அமைந்தது.
அக்டோபர்:
1 - பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மரணமடைந்தார்.
2 - ரேஷன் கடைகளில் ரூ. 50க்கு பத்து சமையல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
- பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
3 - மமதா பானர்ஜியின் தொடர் போராட்டம் காரணமாக சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக ரத்தன் டாடா அறிவித்தார்.
6 - இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி ஜனக பெரேரா, அவரது மனைவி உள்பட 26 பேர் பலியானார்கள்.
7 - பொருளாதார நெருக்கடியால், வேலையை இழந்த அமெரிக்கா வாழ் தமிழர் தனது மனைவி, 3 மகன்கள், மாமியாரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
11 - இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
17 - இலங்கைப் பிரச்சினை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட 16 எம்.பிக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினர்.
19 - இலங்கையில் தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.
20 - பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் மரணமடைந்தார்.
23 - இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டனர்.
24 - கடும் நெருக்கடியைத் தொடர்ந்து இயக்குநர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர்.
25 - புதிய திருப்பூர் மாவட்டம் உதயமானது.
26- மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் புரோஹித் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சென்னையில் அறிவித்தார்.
28 - விடுதலைப் புலிகள் கொழும்பு அருகே விமானத் தாக்குதலை நடத்தினர்.
30 - அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 70 பேர் பலியானார்கள்.
நவம்பர்:
1 - இலங்கைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி சென்னையில் நடிகர், நடிகையரின் பிரமாண்ட உண்ணாவிரதம், கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்பு.
3 - ஆண்டவன் தீர்மானித்தால் நாளைக்கே அரசியலில் இறங்குவேன் என ரசிகர்களிடம் அறிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
5 - அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஓபாமா சரித்திர சாதனையுடன் மாபெரும் வெற்றி பெற்றார்.
8 - திருமங்கலம் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ வீர இளவரசன் மரணமடைந்தார்.
- இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி சென்னையில் சின்னத்திரை நடிகர், நடிகையர் உண்ணாவிரதம்.
12 - சென்னை வந்த பாஜக தலைவர் அத்வானி, ரஜினிகாந்த்தை வீடு தேடிச் சென்று சந்தித்தார்.
- சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கொலை வெறித் தாக்குதல் - 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்த அவலம்.
13 - சட்டக் கல்லூரி வன்முறையை போலீஸார் வேடிக்கை பார்த்ததைத் தொடர்ந்து கமிஷனர் மாற்றம். புதிய கமிஷனராக ராதாகிருஷ்ணன் நியமனம்.
16 - இலங்கைத் தமிழர்களுக்காக நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் தனி உண்ணாவிரதம்.
19 - பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியார் சென்னையில் மரணமடைந்தார்.
26 - மும்பையில் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல். 180 பேர் பலியானார்கள். அஜ்மல் கஸாப் என்ற தீவிரவாதி பிடிபட்டான். 9 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
27 - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்தார்.
28 - நாரிமன் ஹவுஸ் மற்றும் டிரைடென்ட் ஹோட்டல் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டது.
29 - தாஜ் ஹோட்டலையும் கமாண்டோப் படையினர் மீட்டனர். தீவிரவாதிகளின் 60 மணி நேர வெறியாட்டம் முடிவுக்கு வந்தது.
30 - உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகினார். ப.சிதம்பரம் புதிய உள்துறை அமைச்சராக நியமனம்.
- பாமக பொருளாளரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு விடுதலை செய்யப்பட்டார்.
டிசம்பர்:
1 மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகினார்.
3 - மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பதவி விலகினார். அசோக் சவான் புதிய முதல்வரானார்.
8 - டெல்லி, ராஜஸ்தான், மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி. மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வென்றது.
11 - மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பாவின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. லஷ்கர் தலைவர் சயீத் உள்ளிட்ட 4 தலைவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது.
13 - ஆந்திராவில் 2 என்ஜீனியரிங் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 மாணவர்களை போலீஸார் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 - தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.
- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் பட்டம் வழங்கப்படும் என ராணுவம் அறிவித்தது.
15 - ஓட்டுக்கு நோட்டு விவகாரத்தில் அடிபட்ட சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் அப்பாவிகள் என நாடாளுமன்றக் குழு அறிவித்தது.
- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஈராக் டிவி நிருபர் முன்டாஸர் அல் ஜய்தி, ஷூக்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
- திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
16 - சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
- திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளராக லதா அதியமான் அறிவிக்கப்பட்டார்.
- தெலுங்கு நடிகை பார்கவி குத்திக் கொல்லப்பட்டார். அவரது காதலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அறிவித்தார்.
- சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் ரவுடி பரமேஸ்வரி அவரது தம்பிகளாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.
- திருமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளராக தனபாண்டியன் அறிவிக்கப்பட்டார்.
18 - இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம் ரத்து செய்யப்பட்டது.
19 - ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் அந்துலே ராஜினாமா செய்து கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். ஆனால் அது பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
- இத்தாலி அருகே கடலுக்கடியில் போடப்பட்ட கேபிள்கள் நாசமடைந்ததால், இன்டர்நெட் சேவை பெரும் பாதிப்பை சந்தித்தது.
20 - சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பெரியார் தி.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 - போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகள் பலியானதாக தமிழகம் முழுவதும் பரவிய வதந்தியால் மக்கள் பெரும் பீதியடைந்து மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர்.
- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி சென்னை வந்தார்.
22 - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழறிஞர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பூரண மது விலக்கு கோரி மனு அளித்தனர்.
- பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
24 - உ.பியில், முதல்வர் மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு நன்கொடை தர மறுத்த பொதுப்பணித்துறை என்ஜீனியர் மனோஜ் குப்தா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. சேகர் திவாரி மற்றும் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
25 - மலேசியாவில் சிக்கித் தவித்த 21 தமிழக இளைஞர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.
26 - திருமங்கலம் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 26 பேர் களத்தில் இருந்தனர்.
27 - திமுக பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வானார். 10வது முறையாக தலைவரானார் முதல்வர் கருணாநிதி.
- திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் திமுக, அதிமுகவினர் பயங்கர மோதல்.
- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார்.
- மும்பை சிறையில், தீவிரவாதி கஸாப்பை, 35 சாட்சிகள் அடையாளம் காட்டினர்.
28 - ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
- பெங்களூரில் போலீஸாருக்குப் பயந்து ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்த கல்லூரி மாணவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
- கொழும்பு தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி.