Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்க முடியாத-2008

Subscribe to Oneindia Tamil

Year 2008
யாராலும் மறக்க முடியாத, நிகழ்வுகள் நிரம்பிய ஆண்டாக, முடிவுக்கு வந்துள்ளது 2008.

ஆண்டின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பஞ்சமே இல்லாமல் ஓடி முடிந்துள்ளது 2008.

வருடத்தின் முதல் நாளிலேயே இந்தியாவின் ராம்பூரில், சி.ஆர்.பி.எப் முகாம் மீது தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தினர். இலங்கையிலோ தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டைப் புரட்டிப் போட்ட முக்கியமான மூன்று விஷயங்கள் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வு.

கசப்போடு தொடங்கிய இந்த ஆண்டு, விரக்தியும், வேதனையுமாக முடிந்திருக்கிறது.

மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போன 2008ஐ திரும்பிப் பார்ப்போம்...

ஜனவரி:

தேதி 1 - உ.பி மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

- இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ் எம்.பி. தியாகராஜய்யா மகேஷ்வரன் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

3 - சரத்குமாரின் புதிய கட்சித் தொடக்க விழா மாநாட்டுக்கான பந்தல் கால் மதுரையில் நடப்பட்டது. ராதிகா அடிக்கல் நாட்டினார்.

- விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

- அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

- அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

4 - தேசியக் கொடிக்கு அருகே கால் வைத்திருந்ததாக டென்னிஸ் புயல் சானியா மிர்ஸா மீது போபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

6 -விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் (சண்முகநாதன் ரவிசங்கர்) ராணுவத் தாக்குதலில் பலியானார்.

- ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி, ஹர்பஜன் சிங் மீதான தடையை ஐசிசி நீக்கும் வரை சிட்னி நகரை விட்டு இந்திய அணி கிளம்பாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆஸ்திரேலிய டூரையும் அது சஸ்பெண்ட் செய்தது.

- சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் செலுத்ததால் சர்ச்சை எழுந்தது. கவிஞர் அறிவுமதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களுடன் குஷ்பு கத்தி வாதிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்கு திருடிய திருடனைப் பிடித்த ஊர் மக்கள் அவரை சரமாரியாக அடித்து, ஜீப்பில் கட்டி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று, கண்களில் ஆசிட் ஊற்றிக் கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க தடை விதித்துள்ளதாக மலேசிய அரசு அறிவித்தது.

8 - கொழும்பு அருகே நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை தேச கட்டமைப்புத் துறை அமைச்சர் டி.எம் தசநாயகா பலியானார்.

- தவறான தீர்ப்புகளைக் கொடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த சர்ச்சைக்குரிய நடுவர் ஸ்டீவ் பக்னர், இந்தியா - ஆஸ்திரேலிய தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

- மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. 15 வயது சிறுவன், அதிபரைக் காப்பாற்றினான்.

- கணவரை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும், அவரை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் நடிகை ஷோபனா மீது நோய்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாலினி கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

9 - தொழிலதிபர் தன்னைக் கற்பழிக்க முயன்றாக கூறி ஓசூர் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரிய நடிகை விந்தியாவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.

10- டாடா குழுமத்தின் புரட்சி காரான ரூ.1 லட்சம் மதிப்புடைய டாடா நானோ டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

- நடிகர் பாண்டியன் (48) உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

- மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.

- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தமிழகத்திற்குள் வந்திருப்பதாக வதந்தி பரவியது.

- கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.

11 - ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

- கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது.

- சென்னை போலீஸார் தேடி வந்த மதுரை ரவுடி டாக் ரவி மதுரை, திருமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

- எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலாக ஏறி சாதனை படைத்த நியூசிலாந்தின் எட்மண்ட் ஹில்லாரி மரணமடைந்தார்.

13 - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

- சிவாஜி பட வெள்ளிவிழாவின்போது ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ஷ்ரியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார் கொடுத்தது.

14 - குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.

15 - ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் துக்க பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

- நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

- இலங்கையின் மொனரகல்லா மாவட்டத்தில் பஸ் குண்டு விபத்தில் 24 பேர் பலியானார்கள்.

17 - எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு பெரும் இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக வருகிற ஜெயலலிதா சென்றார். எம்.ஜி.ஆர். குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்.

- பெர்த் டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

- திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு பணம் கேட்டு லண்டனிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

18 - என்.டி.டி.வியின், 2007ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்காளருக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோன் சிங் வழங்கினார்.

- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - பெர்த் டெஸ்ட் போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.

- சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டின்போது ரகளை செய்ததாக நடிகரும் அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரனுமான ரித்தீஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

21 - தீவிரவாதப் பாதையிலிருந்து விலகி அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு தனது தந்தை பின் லேடனுக்கு அவரது மகன் ஒமர் பின் லேடன் கோரிக்கை விடுத்தார்.

- மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தலைவர்களும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

23 - தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என சட்டசபையில் ஆளுநர் அறிவித்தார்.

- செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அதை படம்பிடித்து வரும் ஸ்பிரிட் விண்கலம் (6 சக்கர ரோபோட்) அனுப்பிய படத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் போன்ற காட்சி இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

- விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த முக்கிய முகாமான எக்ஸ்ரே தளம் மீது குண்டு வீசியதாகவும், பிரபாகரன் மயிரிழையில் தப்பியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.

24 - சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

- ரஜினிகாந்த், விஜய்யைத் தொடர்ந்து சிம்புவும் இனிமேல் சினிமாவில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.

- தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், பஸ் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன.

25 - அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீதான சிறுதாவூர் நில மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவுக்கு லண்டன் கோர்ட், போலி பாஸ்போர்ட் வழக்கில் 9 மாத சிறைத் தண்டனை விதித்தது.

26- அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அரசே அதை நிறைவேற்றலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

27 - முன்னாள் இந்தேனேசிய அதிபர் சுகர்தோ மரணமடைந்தார்.

28 - ஹைதராபாத் அருகே நடிகர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா மற்றும் குழந்தைகள் மீது சிரஞ்சீவி ரசிகர்கள் கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். இதற்காக ராஜசேகர் வீட்டுக்கு நேரில் வந்து சிரஞ்சீவி மன்னிப்பு கேட்டார்.

- பலாலி ராணுவ தளத்திற்கு வந்த அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதாபாயா ராஜபக்சே மீது விடுதலைப் புலிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். ஆனால் கோதாபாயா தப்பி விட்டார்.

- ஈழ தமிழ் இலக்கியத்தின் முன்னோடியும், பிரபல எழுத்தாளருமான செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மரணமடைந்தார்

29 - இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீதான இனவெறி குற்றச்சாட்டை ஐசிசி மேல் முறையீட்டு ஆணையம் ரத்து செய்தது.

- உடற்பயிற்சி செய்தபோது மூக்கின் மீது எடைக் கல் விழுந்து நடிகர் தனுஷ் காயமடைந்தார்.

30 - சென்னையில் ரூ. 76.32 கோடி மதிப்பீட்டில் மத்திய செம்மொழி தமிழ் மையத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

31 - நடிகை தேவயானிக்கு சென்னையில் 2வது பெண் குழந்தை பிறந்தது.

- விருத்தாச்சலம் நகர தேமுதிக ஒன்றிய செயலாளர் லெனின் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் கட்சித் தலைவர் விஜயகாந்த்.

பிப்ரவரி:

1 - தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேறியது.

- ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் மீது இனவெறி ரசிகர்கள் முட்டைகளை எறிந்தனர்.

- இலங்கையின் தம்புலா நகரில் பஸ்சில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

2 - பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கும், அவரது இத்தாலி காதலி கார்லா ப்ரூனிக்கும் பாரீஸ் நகரில் திருமணம் நடந்தது.

4 - மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீட்டின் மீது கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- நடிகை விந்தியா தொடர்ந்த கற்பழிப்பு முயற்சி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

6- ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி (91) நெதர்லாந்தில் மரணமடைந்தார்.

7 - மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.

- செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

- சிறுநீரக மோசடி டாக்டர் அமீத் குமார் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார்.

8 - முன்னாள் சபாநாயகர் ராஜாராம் சென்னையில் மரணமடைந்தார்.

9 - சமூக சேவகர் டாக்டர் பாபா ஆம்தே (94) மரணமடைந்தார்.

10 - சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது.

11 - சென்னையைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியரைக் கடத்திய வழக்கில் நடிகை பாபிலோனாவின் தம்பி பாலு கைது செய்யப்பட்டார்.

- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், அவரது மனைவி சுஜயா சந்திரனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

- நீண்ட காலமாக காதலித்து வந்த மான்யதாவை நடிகர் சஞ்சய் தத் மணந்து கொண்டார்.

13 - வட இந்தியர்களுக்கு எதிரான கலவரத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பை போலீஸார் கைது செய்தனர். ஆனால் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டார்.

- மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

15 - அமெரிக்காவின் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் 7 மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவர் தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

16 - நடிகை விந்தியாவுக்கும், நடிகை பானுப்பிரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் குருவாயூரில் திருமணம் நடந்தது.

17 - செர்பியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர நாடாக தன்னை கொசாவோ பிரகடனம் செய்து கொண்டது.

18 - பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடந்தது.

- தமிழகப் பள்ளிக்கூடங்களில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக மலையாள அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19 - 50 வருடங்களாக வகித்து வந்த கியூப அதிபர் பதவியிலிருந்து விலகினார் பிடல் காஸ்ட்ரோ.

20 - இந்தியன் பிரீமியர் லீக்கில் இடம்பெற்றுள்ள 82 சர்வதேச மற்றும் தேசிய வீரர்கள் மும்பையில் ஏலம் விடப்பட்டனர். எம்.எஸ்.டோணியை அதிக விலைக்கு (ரூ. 6 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

- பிரபல மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன் சென்னையில் மரணமடைந்தார்.

22 - சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் ரஜினிகாந்த்தை சக வக்கீல்கள் அடியாட்கள் உதவியுடன் படுகொலை செய்தனர்.

24 - திருவண்ணாமலை அருகே குரங்குகள் சரமாரியாக சாலையின் குறுக்கே பாய்ந்ததால், நிலை தடுமாறிய டாடா சுமோ கார் புளியமரத்தில் மோதி அதில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.

25 - கியூப அதிபராக பிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

- விக்ரம், ஸ்ரேயா நடிக்கும் கந்தசாமி படப்பிடிப்பின் போது வேப்ப மரத்தில் பால் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

27 - எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார்.

- மனைவியின் ஆட்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயண ராவின் மகன் தாசரி பிரபு அவர்களிடமிருந்து தப்பி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

- பெனாசிரின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

29 - இயக்குனர் ஏஆர் முருகதாஸ் திடீரென கைது செய்யப்பட்டார்.

- விவசாயிகளின் ரூ. 60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+