பாரதியை தீவிரவாதி என்று ஒதுக்கிய சமூகம் இது!-கவிஞர் புவியரசு
கோவை: தொலைநோக்குச் சிந்தனையுடன் பாடிய பாரதியை இன்று மகாகவி என்கிறோம். ஆனால் அன்று அவரை தீவிரவாதி என ஒதுக்கியது ஒரு கூட்டம் என்றார் கவிஞர் புவியரசு.
கோவை மாவட்ட கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சாயிபாபா காலனி பாரதி பூங்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரதி நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பேசியது:
உயிர் பெற்ற தமிழ்ப் பாட்டு என்னும் கவிதையில் ஊருக்கு உழைப்பவர்களே சிறந்தவர்கள் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார். தொலைநோக்கு சிந்தனையுடன் கவிதைகளை எழுதியுள்ளார்.
அப்படிப்பட்ட தேசிய கவிஞர் பாரதியை, அன்றைய தேசிய இயக்கத்தினர் தீவிரவாதி என ஒதுக்கியது ஒரு சோக வரலாறு.
பாரதிக்கும், வள்ளலாருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன. தேசியத்தை மையமாக வைத்தே பாரதி கவிதைகளை எழுதியிருந்தாலும், சமூக பிரச்னைகள், சாதி வேறுபாடுகளை கடுமையாக சாடியுள்ளார், என்றார் புவியரசு.
பின்னர் பாரதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பாலகிருஷ்ணன், மாநகராட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் குழுத் தலைவர் புருஷோத்தமன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் பெ.சிதம்பரநாதன், செயலர் ப.பா.ரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications