மதுரையில் தமிழ்ப் பல்கலை அமைக்க கோரிக்கை
மதுரையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என சாகித்ய அகாதெமி தமிழ் மொழிக் குழு ஒருங்கிணைப்பாளர் சிற்பி பாலசுப்பிரமணியன் கூறினார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மதுரை செந்தமிழ்க் கல்லூரி உயராய்வு மையம் இணைந்து நடத்திய சங்க இலக்கியத் துறைகள் பயிலரங்கம் நிறைவு விழா நடைபெற்றது.
அதில் சிற்பி ஆற்றிய நிறைவுரை:
தமிழகத்தை பல மன்னர்கள் ஆட்சிபுரிந்தாலும், பாண்டித்துரை தேவர் மட்டுமே தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழுக்கு உரிய முறையில் தொண்டாற்றி உள்ளார்.
தமிழை புகழில் ஏற்றியவர் மகாகவி பாரதியார். மதுரை தமிழ்ச் சங்கம் குறித்து 'இந்தியா' இதழில் அவர் எழுதியுள்ளார். மதுரை தமிழ்ச் சங்கமானது, தமிழ்ப் பல்கலைக்கழகமாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதில் வெளியிட்டுள்ளார். பாரதியாரின் இவ்விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
சங்க இலக்கியத்தில் புலமை பெற்ற 50 ஆய்வாளர்களை அடையாளம் காணும் வகையில், நாடு முழுதும் இதுபோன்ற பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன.
தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களுமே தமிழை தலைநிமிரச் செய்துள்ளன.
தமிழை முழுமையாக அறிந்தவர்களே பாடல் எழுதும் நிலை சங்க காலத்தில் இருந்தது. ஆனால், தற்போது அப்படிப்பட்ட நிலை இல்லை. மேலும் தமிழை பேணிப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம்.
பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்த நிலையில் தெலுங்கு, கன்னட மொழிகளுக்கும் அதுபோல அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
மொழி பழமையில்கூட அரசியல் கலந்துவிட்டது. தமிழ் பாரம்பரியம் மிக்கது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும் என்றார்.
தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் தலைவர் சிலம்பொலி செல்லப்பன் சிறப்புரையாற்றினார். செந்தமிழ்க் கல்லூரி செயலர் ரா.குருசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ரா.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ச் சங்க செயலர் ரா.அழகுமலை, உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலர் ந.மணிமொழியன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் ஐ.சிங்காரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பயிலரங்கத்தில் தமிழ் இலக்கிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. பயிலரங்கம் குறித்து இலக்கிய ஆய்வு மாணவ, மாணவியர் பேசினர்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் நிர்மலா மோகன் வரவேற்றார். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் க.சின்னப்பா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications