வைகுண்ட ஏகாதசி - 7ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழா ஆண்டு தோறும் வைணவத் தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.
திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் தொண்மைவாய்ந்தது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தொடங்கிய முதல் பத்து உற்சவம் வரும் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 7ம் தேதியன்று அதிகாலை 2 மணி முதல் 4.30 மணிவரை மிகசிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்று இரவே இராபத்து உற்சவம் துவங்கி ஜனவரி 16ம் தேதி முடிய நடைபெறுகிறது. இந்த காலங்களில் உற்சவர் பல்வேறு திருக்கோலங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 12 மணிமுதல் 2 மணிவரை விஷ்வரூப அலங்காரமும், தனூர் மாத பூஜையும் நடைபெறுகிறது. அதிகாலை 4.00 மணிக்கு உற்சவர் மகாமண்டபத்தில் இருந்து உட்பிரகாரமாக வலம்வந்து 4.30 மணியளவில் பரமபதவாசலை அடைகிறார். பரமபத வாசல் திறக்கப்பட்டு எதிரே எழுந்தருளியிருக்கும் நம்வாழ்வாருக்கு காட்சியளிக்கிறார்.
பரமபத வாசல் தரிசனத்திற்காக சிறப்பு அனுமதி சீட்டு, பொது தரிசனம், கட்டண அனுமதி சீட்டு என மூன்று வகைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏகாதசி திருநாளையொட்டி கோயில் முழுவதும் ரூபாய் 2 லட்சம் செலவில் மலர் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை தூர்தர்ஷனின் பொதிகை அலைவரிசை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.