புத்தகங்களை எரித்து குளிர் காய்ந்த ஆசிரியர்கள்!
பாட்னா: பீகார் மாநிலத்தில், கடும் குளிரிலிருந்து தப்ப ஏழை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பழைய புத்தகங்களை தீயில் போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்துள்ளனர் கொடுமைக்கார ஆசிரியர்கள்.
கயா மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. புத்தகத்தை சரஸ்வதிக்கு சமம் என்பார்கள். ஆனால் அந்தப் புத்தகங்களை, அதுவும் ஏழை மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை தீயில் எரித்து குளிர்காய்ந்த ஆசிரியர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் கடும் குளிர் வாட்டி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் குளிருக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கயா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஏழை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்களை தீயில் போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்துள்ளனர் என்று மாவட்ட காவல்துறை அதிகாரி ஹன்ஸ்நாத் சிங் கூறியுள்ளார்.