ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா?: டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஆன்லைன் வாக்கெடுப்பு!
டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது.
இதற்காத, http://jallikatu.com/ என்ற இணையதளத்தை அது உருவாக்கியுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு குறித்த குறிப்புகள் மற்றும் அதன் பெருமைகள் ஆகியவற்றை ஒரு பக்கத்திலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள், அதற்கு தடை கோருவோர் அதற்குக் கூறும் காரணங்கள் உள்ளிட்டவற்றை மறுபக்கத்தில் விளக்கியுள்ளது.
இதில் ஏதாவது ஒன்றுக்கு இணையதள வாசகர்கள் வாக்களிக்கலாம்.
இந்த ஆன்லைன் கருத்துக் கணிப்பு முடிவுகள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்படவுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ராகுல் கன்சால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாளிதழ் என்ற முறையில், உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது எங்களுக்கு வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஏற்கனவே எங்களது சென்னை பதிப்பில் ஜல்லிக்கட்டு குறித்த கட்டுரைகளை நாங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
இந்தப் பிரச்சினையில் எங்களது வாசகர்கள் ஈடுபாட்டோடு இருக்க வேண்டும் என்பதும் இந்த வாக்கெடுப்பின் நோக்கங்களில் ஒன்று. ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்திலும், அதுகுறித்த கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் வசதியாகவே தனி இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.
சென்னையைச் சேர்ந்த ஜேடபிள்யூடி என்ற நிறுவனம், இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆன்லைன் வாக்கெடுப்பி்ல இதுவரை 16,639 பேர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 14 ஆயிரத்து 304 பேர் தடை செய்ய வேண்டும் என்று கோரியும் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு தவிர சென்னையிலும் மதுரையிலும், ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளதாம்.