தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பேச்சுப் போட்டி
ராமநாதபுரம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் கிளை சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை கொண்டாடும் வகையில் கல்லூரிகளிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
மதவெறி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் ராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றில் பேச்சுப் போட்டிகள் ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்றன.
இப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வள்ளிபாலா தலைமை வகித்து பரிசுகளை வழங்கிப் பேசினார்.
மாவட்ட துணைத் தலைவர் கவிநிலவன், ராமநாதபுரம் நகர் செயலர் பச்சை ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் துறைத் தலைவர்கள் நடத்தினர்.
சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் எஸ். சிவயோகா (முதல் பரிசு), பி. ரேணுகாதேவி (2-வது பரிசு), கோமதி (3-வது பரிசு), அரசினர் மகளிர் கல்லூரியில் வி. உமா மகேஸ்வரி (முதல் பரிசு), டி. முனீஸ்வரி (2-வது பரிசு), ஜே. சரண்யா (3-வது பரிசு) ஆகியோர் பரிசு பெற்றனர்.
சங்க மாவட்டச் செயலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications