தமிழக சுற்றுலா துறைக்கு தேசிய விருது
சென்னை: சிறந்த சுற்றுலா துறைக்கான தேசிய விருது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழக சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-07ம் ஆண்டுக்கான விருதை தமிழக சுற்றுலாத் துறை வென்றிருந்தது. இந் நிலையில் 2007-08ம் ஆண்டுக்கான விருது நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்விருதை தமிழக சுற்றுலாத்துறை பெற்றுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை ஆணையர் ராஜாராம் ஆகியோரிடம் இந்த விருதை வழங்கினார்.
கடந்த 2007-08ல் தமிழக அரசு சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறந்த விளம்பரங்கள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளை மேற்கொண்டதால் இவ்விருது கிடைத்துள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழக சுற்றுலாத்துறை பசுமைசார் சுற்றுலா, சுற்றுப்புற சுற்றுலா போன்றவற்றில் அதிக அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 17.53 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 5.06 கோடியாக இருந்தது.
அதே போல சிறந்த இரண்டு நட்சத்திர ஹோட்டலுக்கான தேசிய விருதை சென்னை எழும்பூரில் உள்ள பாண்டியன் ஹோட்டல் பெற்றுள்ளது.
இந்த விருதினை, பாண்டியன் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் மனோராஜ் மற்றும் அவரது மனைவி நீதா மனோராஜ் ஆகியோர் ப.சிதம்பரத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications