தமிழ்மகனுக்கு சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை பரிசு
சென்னை: கடந்த ஆண்டு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நினைவாக நடத்தப்பட்ட அறிவியல் புனைகதை போட்டியில் எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
தமிழில் அறிவியல் புனைகதைகளின் முன்னோடியாக திகழ்ந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் முதல் ஆண்டு நினைவு தினமான இன்று அனுசரிக்கப்படுகறது.
இதையடுத்து அவரின் நினைவாக அறிவியல் புனைகதை போட்டி ஒன்று அவரது குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தியது.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய கிளாமிடான் என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெளஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசுகளை பெற்றனர்.
பரிசளிப்பு விழா வரும் மார்ச் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன்.