மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு கங்கை தீர்த்தம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு பயன்படுத்த கங்கை, காவிரி உள்ளிட்ட 7 புனித நதிகளிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை அருள்மிகு சோமசுந்தரேஸ்வர், மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது.
இதற்கு முன்னதாக நேற்று 29ம் தேதி காலை தன பூஜை மற்றும் ஆசார்ய தசவித ஸ்நானம் ஆகியவை நடைபெற்றன. இதை தொடர்ந்து மாலையில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு கிராம தெய்வங்களது அனுக்கிரகம் கோரும் கிராம சாந்தி பூஜையும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்துக்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரும் 2ம் தேதி யாகபூஜைகள் நடக்கின்றன. இதற்காக மூன்று பெரிய ஹோமகுண்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, யாகசாலைப் பொருள்கள் தற்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரூரிலிருந்து யாகத்துக்குப் பயன்படுத்த 90 டின்களில் நெய் வரவழைக்கப்பட்டுள்ளது. யாக பூஜைக்கு கங்கை, காவிரி, ராமேசுவரம், வைகை, நூபுரகங்கை உள்ளிட்ட 7 இடங்களிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து கும்பங்களில் ஊற்ற பன்னீர் 40 டின்களில் வரவழைக்கப்பட்டுள்ளது.
பின்னர் கங்கை, காவிர் தீர்த்தங்கள் கும்பங்களில் பன்னீருடன் கலந்து பூஜை செய்யப்படும். பின்னர், கும்பாபிஷேக நிகழ்ச்சியின்போது, கோபுரங்களில் ஊற்றி நன்னீராட்டப்படும்.












Click it and Unblock the Notifications