பெண்கள் போராட்டம் தீவிரமடைகிறது-6-வது நாளாக உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி சென்னையில் பெண்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சோர்வடைந்த நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
பேராசிரியை சரஸ்வதி தலைமையில், 100 பெண்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் முதலில் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கவே, தற்போது மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தின் வளாகத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி வருகின்றனர். தேனி சித்ரா, காஞ்சிபுரம் சசிகலா, சென்னை கவிதா ஆகிய மூன்று பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு உடல் நலம் பரிசோதிக்கப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் பெயரில் நடந்து வரும் இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இன்று 6-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது. மேலும் பலர் மயக்க நிலையில் போராட்டத்தை தொடருகின்றனர். சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்தபோது அவர்கள் மறுத்து விட்டனர்.
போராட்டக் குழுத் தலைவர் சரஸ்வதி கூறுகையில், சோனியா காந்தி நினைத்தால் ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.
மரணத்தின் வலி அவருக்குத் தெரியும். தடுத்து நிறுத்தக் கூடிய இடத்தில்தான் அவர் இருக்கிறார்.
நாங்கள் அரசியல் நோக்கத்தோடு இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. இங்கு யாரும் அரசியல்வாதிகள் இல்லை.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சென்னை, காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்கு கொண்டுள்ளோம். 100 பேர் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றார்.