ஜெ.வுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் பாராட்டு
டொரன்டோ: இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பது மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படக் கூடியது என்று கனடா தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான் ஜெயலலிதா கூறியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
அண்மையில் இலங்கை சென்று வந்த வாழும் கலை அமைப்பு அறக்கட்டளையின் நிறுவனர் சிறீ ரவிசங்கர் குருஜி, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் நிலை குறித்து வீடியோக் காட்சிகளை என்னிடம் காண்பித்தார்.
இந்த காட்சிகளைப் பார்த்த பிறகுதான் இலங்கைத் தமிழர்கள் அங்கே கைதிகளைப் போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. அக்காட்சிகளைப் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்கி தமிழினத்தை முற்றிலும் அழித்துவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் தமிழினத்தைப் பாதுகாக்கவும் தமிழ் மக்கள் தன்மானத்துடன் வாழவும் தனித் தமிழீழம் அமைக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தீர ஒரே வழி, இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழர்களுக்கென தனி ஈழத்தை உருவாக்குவதே.
இலங்கை இனவாத அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப் போவதில்லை. அவர்கள் தமிழர்களை அடிமைகளாக நடத்தவே விரும்புகின்றனர்.
ஜெர்மனியில் யூதர்களை அழித்த ஹிட்லர் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. அதுபோன்ற ஆட்சியைத்தான் தற்போது இலங்கையில் ராஜபக்ச நடத்தி வருகிறார். வீடுகளை இழந்து, மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் அரசு முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர் என்று ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார்.
அண்மையில் திமுக நடத்திய வேலை நிறுத்தம் காரணமாக இலங்கைக்கு இந்தியாவின் சிறப்புத் தூதுவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்கிறார். தூதுவர்கள் இலங்கைக்குச் சென்றதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
கருணாநிதி உருப்படியாக எதுவும் செய்யவில்லை..
ராணுவம் நடத்தும் தாக்குதலில் அங்குள்ள அப்பாவித் தமிழர்கள் நாளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். இதனைத் தடுக்க கருணாநிதி எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனித் தமிழீழம் அமைக்கப்படும்.
ஜெயலலிதா முன்னர் விடுதலைப் புலிகள் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தெரிவித்த எதிர்க் கருத்துக்களை வைத்து அவரது மனமாற்றம் தேர்தல் அரசியலை மையமாகக் கொண்டதாகச் சிலர் குறை சொல்லக்கூடும். எங்களைப் பொறுத்தளவில் அப்படி ஒரு உள்நோக்கம் கற்பிப்பது தேவையற்றி திருப்பணி என நினைக்கிறோம்.
கையாலாகாத கருணாநிதி..
கருணாநிதி தனது இயலாமையையும் கையாலாகாத் தன்மையையும் மறைக்க "தமிழ் ஈழம் மலருமானால் மகிழ்ச்சி அடைவேன். இலங்கை தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்குமானால் திமுக மூன்றாவது முறையாகக் கூட பதவி இழக்கத் தயார். உயிரையும் விடத்தயார்" என கீறு விழுந்த தட்டுப்போல் பாடிக் கொண்டே இருக்கிறார்.
அமைச்சர் சிதம்பரம் தனது பங்குக்கு "இலங்கையில் இயல்பு நிலை திரும்பவும் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வலிமையான கருத்தை நேற்று இந்தியா வைத்துள்ளது. அதில் நல்ல முடிவு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்னும் 24 அல்லது 48 மணி நேரம் வரை என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்" என திருவாய் மலர்ந்துள்ளார்.
மேலும் "இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. இலங்கையில் போரை நிறுத்துவதற்கும் தமிழர்களை பாதுகாப்பதற்கும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இலங்கை ஒரு தனிநாடு எனவே நாம் அதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றும் சிதம்பரம் பேசியிருக்கிறார். சிதம்பரம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.
சிங்கள ராணுவம் இன்று காலை வான், கடல், தரை வழியாகப் பாதுகாப்பு வலயத்தின் மீது இறுதிப் போரைத் தொடங்கியுள்ளது. வானில் இருந்து குண்டு மழை பொழிகிறது. குறைந்தது ஆண், பெண், குழந்தைகள் எனப் பத்தாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என அஞ்சப்படுகின்றது.
யார் எதைச் சொன்னாலும் இந்த நேரம்வரை இந்தியா போர் நிறுத்தம் செய்யுமாறு சிங்கள அரசைக் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. காரணம் இந்தியாவே அதிநவீன ரேடார்கள், ராணுவ தளவாடங்கள், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், ராணுவ வல்லுநர்களை வழங்கியும் பணமும் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது.
திமுக -காங். கூட்டணி தோற்க வேண்டும்...
எனவே தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப் படவேண்டும்.
செம பாடம் கற்பிக்க வேண்டும் ..
தமிழ் உறவுகள், தமிழின உணர்வாளர்கள், திரையுலகக் கலைஞர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், சான்றோர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மீனவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் ஒன்று திரண்டு தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு செம பாடம் கற்பிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications