ஜெ.வை வரலாறு வாழ்த்தும்-ஈழவேந்தன்
டர்பன்: நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காக துணிவோடு குரல் கொடுத்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை வரலாறு என்றும் வாழ்த்தி நிற்கும் என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தற்போது தென் ஆப்ரிக்காவில் வசித்து வருகிறார். ஜெயலலிதாவின் ஈழம் குறித்த பேச்சு தொடர்பாக அவருக்கு நன்றி தெரிவித்து அவர் டர்பனில் இருந்து எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் ஈழத்தமிழர்களின் அன்னை பூமி. அது அவர்களுக்கே உரித்தானது. தமிழீழத்தைத் தவிர வேறு எதுவும் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.
நான் ஆட்சிக்கு வரும்போது, வங்காள தேசத்தை அமைக்க இந்திரா காந்தி படைஅனுப்பியது போல ஈழத்திற்கு இந்தியப் படையை அனுப்பி ஈழத் தமிழருக்கு தனிநாடு அமைக்க உதவுவேன். இந்தியாவைப் பிரிக்கும்படியோ, துண்டாடும்படியோ நான் கூறவில்லை.
மாறாக, தமிழீழம் இலங்கையில் அமைந்தே ஆகவேண்டும் என நான் தெளிவாக உள்ளேன். இதற்காக துணிவோடு செயற்படுவேன். என்று ஓங்கி ஒலித்துள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தமிழ் மக்களும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் தமது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்துகின்றார்கள்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஈழமக்களுக்காக துணிவோடு குரல்கொடுக்கும் செல்வி ஜெயலலிதாவை வரலாறு என்றும் வாழ்த்தி நிற்கும். தமிழீழமக்கள் என்றும் அவருக்குக் கடப்பாடு உள்ளவர்களாகத் திகழ்வார்கள் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.