ஏன் இந்த அலட்சியம்?
-வினோதன்
இலங்கையில் நடப்பது ஒரு இன அழிப்பே. தமிழ் மக்களை வெளிப்படையகவே அந் நாட்டு அரசு கொன்று குவிகிறது, இது உலக நாடுகளுக்குத் தெரிந்தும், ஏன் இந்த அலச்சியம்?.
யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக வெளிநாட்டு பத்திரிகைகள், மற்றும் பன்னாட்டு உதவி புரியும் நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதன் உள் நோக்கம் இன்னுமா உலகத்திற்கு புரியவில்லை?
தமிழ் மக்கள் மீதான கண்முடித்தனமான தாக்குதல்கள் அம்பலம் ஆகியும் இன்னும் என் உலக வல்லரசு நாடுகள் மௌனம் காக்கின்றன?
கொசோவோ, ஜார்ஜியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய இந்த உலக நாடுகள் இப்போது இலங்கையில் மிக மோசமாக வக்கிரமடைந்து அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களை காக்க ஏன் இன்னும் செயல் வடிவம் கொடுக்காமல் மௌனம் காக்கின்றன அல்லது கண்டும் காணமல் இருகின்றன?.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே & பிரதர்ஸ் நாட்டின் முழு அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மற்ற நாட்டுத் தலைவர்களையும் அமைப்புகளையும் மிகவும் பகிரங்கமாகவே அலட்சியமாகவும் அநாகரிகமாகவும் நடத்துவது, விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது.
உலக அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள், ரசாயன குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் போன்ற மிக கொடூரமாக அழிவுகளை விளைவிக்கும் குண்டுகளை எல்லாம் மிகவும் சாதரணமாகவும் துணிச்சலாகவும் மருத்துவமனைகள் மீதும், தற்காலிக மக்கள் குடியிருப்புக்கள் மீதும் ஏவி கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப்படுகின்றன.
இதையெல்லாம் நன்கு அறிந்தும் உலக நாடுகளால் ஏன் என்னும் இந்த சர்வாதிகாரம் கொண்ட இலங்கை அரசின் போரியல் குற்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை?
ஒரு சிறுபான்மை இனம் அதே நாட்டில் உள்ள பெரும்பான்மை இனத்தால் அழிக்கப்படும்போது அதை ஐரோப்பிய ஒன்றியம் வேடிக்கை பார்ப்பது ஏன்?.
ராணுவ ஆக்கிரமிப்பின் போது அகப்பட்ட மகளின் நிலைமையோ சொல்லி மாளாது. அடிப்படை வசதி கூட இல்லாத திறந்த வெளியில் முள் கம்பிகளால் சுற்றி வர அடைக்கப்பட்ட ஒரு சிறிய இடத்தில் ஆயிரக்கணக்கில் மக்களை குவித்து,
ஒரு வேளை கொடுக்கப்படும் ரொட்டி துண்டிற்கே முண்டியடிக்கும் அவலம் , அடுத்த வினாடியே கொல்லப்பட்டு ஆடு மாடு போல குவிக்கப்படும் கோரம்.
விலங்குகளை காப்பதற்கும் அவைகளை யாராவது துன்புறுத்தினால் தண்டிப்பதற்கும் மேலை நாடுகளில் எத்தனை எத்தனை அமைப்புக்கள்...ஆனால் இங்கே மனிதர்களையே மனிதத்தன்மை இல்லாமல் துன்புறுத்தி கொலை செய்வதை தட்டிக்கேட்க ஒரு அமைப்பு கூடவா இல்லை.
வயது அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்ட ஆண், பெண்கள் மர்ம இடங்களில் கைகள் கட்டப்பட்டு உடைகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சோதனைகள் என சொல்லிக் கொண்டு நிர்வாணப்படுத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபடுகின்றனர்.
புலிகளுக்கு எதிரான யுத்தம், தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் இனத்தையே வன்னியில் பூண்டோடு அழிப்பதற்கு திடமான திட்டம் அமைத்து தினம் தினம் கொத்துக் கொத்தாய் அப்பாவி தமிழரின் உயிர்களை பழிவாங்கி, அதையெல்லாம் ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்கின்றனர் சிங்கள ராணுவத்தினர்.
எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் இவை அனைத்தும் உலகிற்கும், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள், செய்தி நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தியும் எமக்கு எந்தவித பலனும் ஏற்படவில்லை.
மாறாக இலங்கை அரசின் ஜோடிக்கப்பட்ட தகவல்களும் உண்மைக்கு புறம்பான காட்சிகளும் காண்பிக்கப்பட்டு உலகிற்கு உண்மை நிலைமை அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது.
மனிதாபிமானமுள்ளவர்களே.. ஒரு சில நிமிடம் சிந்தியுங்கள்!. எத்தனையோ இழந்து விட்டோம், மிஞ்சி இருக்கும் எங்களைக் காக்க உங்கள் குரலையாவது எங்களுக்குக் கொடுங்கள்.