செந்நாய் கடித்து சிறுத்தைபுலி மரணம்
வால்பாறை: வால்பாறை அருகே செந்நாய்கள் கடித்ததில் சிறுத்தை புலி ஒன்று மரணமடைந்ததாக தெரிகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சின்கோனா வனப்பகுதி இருக்கிறது. தேயிலை தோட்டம் நிறைந்த இப்பகுதியில் டான்டீ மருத்துவமனை இருக்கிறது.
ஆள்நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் நேற்று சாலையோரம் சுமார் 8 வயது கொண்ட ஆண் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனப்பகுதியினருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தை புலியை சோதனையிட்டனர். அப்போது அதன் கழுத்து மற்றும் தலை பகுதிகளில் செந்நாய் கடித்தது போன்ற காயங்கள் இருந்தது. இதையடுத்து அந்த சிறுத்தை புலியை செந்நாய்கள் கடித்து கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதை உறுதி செய்யும்பொருட்டு சிறுத்தை புலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,
தனியே வந்த சிறுத்தை புலியை செந்நாய் கூட்டம் துரத்தி கடித்து கொன்று இருக்கலாம் என கருதப்படுகிறது. அது இறந்து கிடக்கும் இடம் ஆள்நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதி என்பதால் வீட்டு நாய்கள் கடித்து கொன்றிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் எதையும் உறுதி சொல்ல முடியும் என்றனர்.