40 ஆண்டுக்கு பின் குடும்பத்தை தேடி வந்தவர்..நிராகரித்ததால் மரணம்
மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற ஒருவர் தனது குடும்பத்தைத் தேடி வந்தார். ஆனால் குடும்பம் நிராகரித்து கைவிட்டதால் மழையில் நனைந்தபடி பரிதாபமாக இறந்து போனார்.
மார்த்தாண்டம் மேலபம்பம் குளத்தன்வீட்டை சேர்ந்தவர் பாலையன். இவரது மனைவி நேசம்மா. மூன்று மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று பாலையன் ஐந்து குழந்தைகளையும், மனைவியையும் விட்டு விட்டு கேரளா சென்றார். மற்றொரு பெண்ணுடன் அவர் சென்றதாக கூறப்படுகிறது.
தனிமையில் தவித்த நேசம்மா பல இடங்களில் தேடியும் பாலையன் கிடைக்கவில்லை. தனி்மை ஒருபுறம், பிள்ளைகளின் தந்தை பாசம் மறுபுறம் என்று இவர்களை பிரச்சனை வாட்டி வதைத்தது.
இருப்பினும் மனம் தளராமல் நேசம்மா ஐந்து குழந்தைகளையும் வளர்த்து நல்ல நிலையை எட்ட செய்தார். நாட்கள் ஓடியது. ஆண்டுகள் கடந்தது.
40 ஆண்டுகள் கழிந்த நிலையில் திடீரென பாலையன் நேற்று முன்தினம் மாலை நோய் வயப்பட்ட நிலையில் மார்த்தாண்டம் பம்பம் பகுதியை வந்தடைந்தார். யாரோ காரில் கொண்டு வந்து அவரை விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவரது மனைவியோ அவரது குழந்தைகளோ அவரை ஏற்று கொள்ள மறுத்து விட்டனர்.
நோய் வயப்பட்ட நிலையில் காணப்பட்ட பாலையனை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் யாரும் பொறுப்பாக ஏற்றி செல்ல மறுத்து விட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் திரும்பி சென்றது.
இந்த துயரமான சூழ்நிலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. கேட்பாரற்றுக் கிடந்த பாலையன், சில மணி நேரங்களில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து குழித்துறை போலீசுக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து ஊர் மக்கள் சார்பில் பாலையன் உடலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
உண்ணாமலைக்கடை பஞ்சாயத்துத் தலைவர் ஜெயசீலன் தலைமையில பொதுமக்களிடம் பணம் பெற்று பாலையன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை நிராகரித்து விட்டுப் போன பாலையன், காலம் போன நிலையில், மீண்டும் திரும்பி வந்தபோது அந்த குடும்பம் நிராகரித்து விட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications