வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்ட தென்காசி எம்பி உறுதி
செங்கோட்டை: வீர வாஞ்சிநாதனுக்கு நினைவிடம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக தென்காசி எம்.பி. லிங்கம் கூறியுள்ளார்.செங்கோட்டையில் மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அவரது சிலைக்கு தியாகிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது நி்னைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிலையின் முன்பு சரியாக 10.50 மணிக்கு அனைவரும் கூடினர். நகராட்சி சங்கு ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்பு வீரவாஞ்சி இயக்கத்தின் நிறுவன தலைவர் பி.ராமநாதன் தலைமையில் தியாகி சாவடி சொக்கலிங்கபிள்ளை முன்னிலையில் சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கல் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வீரவாஞ்சிநாதன் தம்பி மகன் ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன், தியாகிகள் சாவடி சொக்கலிங்கம் பிள்ளை, பிவி பிச்சுமணி, கோதையம்மாள், தியாகி மாடசாமி பிள்ளை, பேரன் பாலசுப்பிரமணியன், தியாகி தர்மராஜ் அய்யர் பேரன் தர்மராஜ், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வீரவாஞ்சி இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகள் 200 பேருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியும், காங் கட்சி சார்பில் 15 ஏழை குழந்தைகளுக்கு ஆடைகளும் வழங்கப்பட்டன.
பின்னர் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் பெ.லிங்கம் நிருபர்களிடம் பேசுகையில், சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் தனது இளம் வயதில் உயிர் தியாகம் செய்த மாவீரன் வாஞ்சிநாதனை நாம் அனைவரும் மறவாமல் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவது நாம் கடமை. இந்த தேசமே அவரது தியாகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளது.
வீரவாஞ்சிநாதன் பிறந்த ஊர் செங்கோட்டை. அவருக்கு இந்த மண்ணில் மணி மண்டபம் அமைக்க 8-8-1957ல் அப்போதைய முதல்வர் காமராஜர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். அவருடைய முயற்சி இதுவரை நிறைவேறவில்லை.
மத்திய-மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். மேலும் வீரவாஞ்சிநாதன் சிலை முன்பு ரூ.5 லட்சம் செலவில் ஹைமாஸ் மின்விளக்கும், நிரந்தரமாக வாஞ்சிநாதன் சிலைக்கு ஏறிச் சென்று மாலை போடும் வகையில் நிரத்தர படிக்கட்டு மற்றும் சுற்று பாதை எனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஓதுக்கீடு செய்து விரைவில் பணி தொடக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
பல ஆண்டு காலமாக நடைபெரும் இந்த நினைவு நாள் அஞ்சலியில் இதுவரை எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது கிடையாது. லிங்கம்தான் முதல் முறையாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.