மங்குஸ்தான் பழம் அமோக விளைச்சல்-சென்னை, மதுரையில் குவிகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடலுக்கும், உணவுக்கும் ஏற்ற பல்வேறு வகை உணவு பொருட்கள், மூலிகை பொருட்கள் நிறைந்துள்ளன. இந்த பகுதிகளில் இருந்து கிராம்பு, மிளகு, ஏலக்காய், ரப்பர், ஏத்தன்பழம், பலாப்பழம், அன்னாசி பழம் போன்றவைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கும் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் விரும்பி வாங்கி சுவைக்கும் பழங்களில் மிக முக்கியமானது மங்குஸ்தான் பழம். இந்த மங்குஸ்தான் பெரும்பாலும் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் உயரத்தில் மட்டுமே வளரக்கூடியது.
தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தான் இந்த பழ விளைச்சல் இருக்கும். மற்ற 9 மாதங்களில் அதன் மரங்களில் ஒரு பழத்தை கூட பார்க்க முடியாது. ஆனால் சீசன் சமயத்தில் ஒவ்வொரு மரமும் சுமார் ஒன்றரை டன் பழங்களை தந்து விவசாயிகளின் மனங்களையும், பையையும் நிறைத்துவிடும்.
இந்நிலையில் இந்த ஆண்டு மங்குஸ்தான் பழ சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. புனலூர், செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கிலோ ரூ. 30க்கு மங்குஸ்தான் பழங்களை அடைத்து மதுரை, திருச்சி, கோவை, சென்னை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.
இவை ரத்த சுத்தகரிப்பு, குளிர்ச்சி, போன்றவைகளுக்கு மங்குஸ்தான் பழம் அருமருந்தாக இருப்பதாலும், தேவை அதிகரிப்பு காரணமாகவும் சென்னை, பெங்களூரு மற்றும் குற்றாலத்தில் கிலோ ரூ. 120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஊர்களில் ரூ. 60க்கு கிடைக்கிறது.