காய்ச்சல்-தர்மபுரி மக்களின் வினோத நேர்த்திக்கடன்
பென்னாகரம்: தர்மபுரி அருகே உள்ள ஜங்கமைனூர் கிராமத்தில் சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல், அம்மை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் இன்று ஒரு நாள் ஊரைவிட்டு வெளியேறி வினோத நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது ஜங்கமைனூர் கிராமம். இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த மூன்று மாதங்களாக சிக்குன் குனியா, வைரஸ் காய்ச்சல், அம்மை நோய் போன்ற நோயின் தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை எடுத்து கொண்ட போதும் இந்த நோய் தீர்ந்தபாடில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அது மற்றவர்களுக்கும் வேகமாக தொற்றிக் கொள்கிறது.
இந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது ஊரில் உள்ள அனைவரும் கடவுளின் கோபத்தை தணிக்கும் வகையில் ஒரு நாள் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக மக்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஒரு பகுதியில் தங்கி வினோதமான நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications