திருடியதை திருப்பி தந்த கனடா திருடர்கள்!
விக்டோரியா: கனடாவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான 30 கம்ப்யூட்டர் மானிட்டர்களை திருடிய திருடர்கள் மனம் மாறி, அந்த மானிட்டர்களை மீண்டும் பழைய இடத்தில் கொண்டு வந்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலவ்னா மருத்துவமனை, அப்பகுதியில் இருக்கும் டிரினிட்டி பாப்டிஸ்ட் தேவாலயத்துக்கு நன்கொடையாக 31 கம்ப்யூட்டர் மானிட்டர்களை வழங்கியது. இதை ஆப்பிரிக்காவில் உள்ளகேமரூன் நாட்டில் இருக்கும் ஏழைகளுக்கு கொடுக்க அந்த தேவாலயம் முடிவு செய்தது.
இந்நிலையில் இந்த கம்ப்யூட்டர்களை தேவாலயத்துக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட தொண்டர் ஒருவர் அதை தனது வீட்டுக்கு எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அந்த கம்ப்யூட்டர் மானிட்டர்கள் திடீரென்று காணாமல் போயின. இதையடுத்து அந்த தொண்டர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்நாட்டு பத்திரிகைகளில் ஆப்ரிக்க ஏழைகளுக்கு நன்கொடையாக கொடுக்க இருந்த கம்ப்யூட்டர்கள் காணாமல் போய்விட்டது என செய்திகள் வெளிவந்தன. இதைபார்த்த அந்த திருடர்கள் மனம்மாறி தாங்கள் எடுத்து சென்ற மானிட்டர்களை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக திருப்பி கொண்டு வந்து வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்த அந்த தொண்டர் 29 கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மீண்டும் பத்திரமாக வந்து சேர்ந்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டார். மேலும், அத்துடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில், உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு வருந்துகிறோம். ஆப்ரிக்க குழந்தைகள் இந்த கம்ப்யூட்டரை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். எங்களை மன்னித்துவிடுங்கள் என அந்த திருடர்கள் கூறியிருந்தனர். இரண்டு கம்ப்யூட்ட்ர் மானிட்டர்களின் நிலைமை என்னவானது என தெரியவில்லை.