பெண் உரிமையை வலியுறுத்தி ஓய்வு பெற்ற எஸ்.ஐயின் பைக் பயணம்
பாவூர்சத்திரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜான் மார்ட்டீன் என்பவர், பெண் உரிமையை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் மார்ட்டீன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் பெண் உரிமை, பெண் நீதியை வலியுறுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மபி, உபி, இமாசல பிரதேசம், டெல்லி, அரியானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 35 ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கடந்த 26ம் தேதி சென்னையில் தனது பயணத்தை துவங்கிய இவர் 7 நாட்களில் விழுப்புரம், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, குற்றாலம், சென்றுவிட்டு பாவூர்சத்திரம் வந்தார். பயணத்தின்போது சாலையோரம் உள்ள காவல் நிலையத்திற்கு செல்கிறார்.
அங்குதான் வைத்திருக்கும் நோட்டை கொடுத்து அதில் அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் அல்லது போலீசாரிடம் வாழ்த்து எழுதி பெற்றுக் கொள்கிறார். இதுவரை 250 காவல் நிலையங்களுக்கு சென்றுள்ளார்.
டெல்லி சென்றதும் பெண் உரிமை பற்றிய தனது கோரிக்கை மனுவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், காங் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுக்கிறார்.
ஓய்வு பெற்றும் பொது பணியில் ஈடுபட்டுள்ள ஜான் மார்ட்டீனை பாவூர்சத்திரம் போலீசார் பாராட்டினர்.