கட்டாய திருமணம்-போலீஸ் உதவியுடன் காதலனை கைபிடித்த பெண்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பெற்றோர்கள் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாக திருச்சி டிஐஜிக்கு மணப்பெண் போன் செய்தார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (22). இவருக்கும், அருகிலுள்ள சுந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணனுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை ஜிஆர் திருமண மண்டபத்தில் வைத்து திருமண நடத்த முடிவு செய்யப்பட்டது. மணமேடைக்கு மாப்பிள்ளையும், பெண்ணும் அழைத்து வர தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பெண் திருச்சி டிஐஜிக்கு போன் செய்து, பெற்றோர்கள் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாக புகார் கூறினார். இதையடுத்து திருச்சி டிஐஜி அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டை எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கந்தர்வக்கோட்டை போலீசார், கல்யாண மண்டபத்துக்குச் சென்று கிருஷ்ணவேணியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தான் திருச்சியில் உள்ள சசிகுமார் என்பவரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
பின்பு, அவர் தான் அணிந்திருந்த அனைத்து நகைகளை தனது தாயாரிடம் கொடுத்துவிட்டு, கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவரது காதலர் சசிகுமார் வரவழைக்கப்பட்டு இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அதே போன்று, மணமகன் சரவணனுக்கு, அவரது அத்தை மகளை உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications