முகாம்களில் தினமும் கொல்லப்படும் தமிழர்கள்!-அம்பலப்படுத்தும் சீமான்
மதுரை: "வட இலங்கையின் முள்கம்பி வேலி முகாம்களுக்குள் தினசரி தமிழர்கள் சொல்லொனாத துயரங்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள். தினமும் பலர் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வேண்டிய உலக நாடுகள் வாய் மூடி நிற்பது ஏன்?", என கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் சீமான்.
திரைப்பட இயக்குனரும் தமிழ் உணர்வாளருமான சீமான் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"இலங்கையில் போர் முடிந்துவிட்டது, புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று இலங்கை அரசும் இந்த உலகமும் அறிவித்துவிட்ட பிறகு, அப்பாவி தமிழர்களை வதைமுகாம்களுக்குள் அடைத்துவைத்து கொலை செய்வது ஏன்?
உணவு, உடை இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வெட்ட வெளியில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட நடுநிலை அமைப்புகளே இதை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் மனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை. வாய்மூடி மவுனிகளாக நிற்கின்றன.
அட, இலங்கையில் போர் நடந்தபோதுதான் அதை நிறுத்தச் சொல்லிக் கேட்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
தமிழன்தானே... செத்தா எவன் கேக்கப் போகிறான் என்ற தைரியும் அவர்களுக்கு.
இப்போது முள் வேலிக்குள் அடைபட்டு சாகும் தமிழர்களையாவது காப்பாற்றும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறதல்லவா?
போர் முடிந்துவிட்டால் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழலாம் என்று ராஜபக்சே கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு என்ன நடக்கிறது? சுமார் 3 1/2லட்சம் தமிழர்கள் வேலி அமைத்து சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.
அடுத்த 2 மாதத்தில் சிங்களர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளுக்கு தமிழர்களை கொண்டு சென்று வேலி அமைத்து அந்த வேலிக்குள் தமிழர்களை கொடுமைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கொடுமைகள் அரங்கேற உள்ளன. மிக நம்பத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல் இது, என்றார் சீமான்.
இந்த நிலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி எறியக் கோரியும், சீமான் தலைமையில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஒன்று கூடும் நிகழ்ச்சி நாளை (18-ந்தேதி) மாலை 5 மணிக்கு மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் நடக்கிறது.
இப்பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழ் உணர்வும், நம் உறவுகளைக் காக்க வேண்டிய அக்கறையும் உள்ள அனைவரும் இந்த போராட்டத்திலே பங்கு பெற வேண்டும், என்று சீமான் கூறினார்.