For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரியில் வெள்ளப் பெருக்கு - ஒகனேக்கலில் குளிக்கத் தடை

By Staff
Google Oneindia Tamil News

Hogenakkal
தர்மபுரி: கர்நாடகத்திலிருந்து அதிக அளவிலான தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டிருப்பதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நுழையும் ஒகனேக்கல் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபிணி அணை நிரம்பி விட்டது. அதேபோல கிருஷ்ணராஜசாகர் அணைக்கும் அபரிமிதமாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தமிழகத்தின் நுழைவுவாயிலான
கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுலுவை நேற்று முன்தினம் மாலை வந்தடைந்தது. தண்ணீர் வர வர அதிகரித்து கொண்டே சென்றது. பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் வரத்தை அளந்து கொண்டிருந்தனர்.

நேற்று மதிய நிலவரப்படி சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்ததாக மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவியில், பாறைகள் அனைத்தையும் மூழ்கடித்த படி செந்நிறத்துடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நடைபாதையில் 2 அடிக்கு மேல்
தண்ணீர் சென்றது.

தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சினி பால்சில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக கொட்டியது. இதில் ஒரு
சில சுற்றுலா பயணிகள் மட்டும் அருவியின் ஒரமான பகுதியில் நின்று குளித்து கொண்டிருந்தனர்.

ஆனால், ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் காவிரி கரையோரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் நடைபாதையை யாரும் கடந்து செல்ல முடியாத அளவுக்கு குறுக்கே கயிறு கட்டப்பட்டது. அந்த இடத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

இதனால் ஆடி மாத பிறப்பையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தண்ணீரை தலையில் தெளித்து கொண்டு திருப்தி அடைந்தனர். ஒரு சில பயணிகள் சின்னாற்றில் ஆனந்தமாக குளித்தனர்.

பென்னாகரம் தாசில்தார் டியூக்பொன்ராஜ் ஆற்றில் பரிசல் ஒட்ட தடை விதித்தார். இதனால் படகுதுறையில் பரிசல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட கலெக்டர் அமுதா கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். தண்டோரா மூலம் இந்த எச்சரிக்கை விடப்பட்டது.

விநாடிக்கு 59,000 கன அடி நீர் திறப்பு..

இதற்கிடையே, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து விநாடிக்கு கிட்டத்தட்ட 59 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணராஜசாகரிலிருந்துதான் அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கிருந்து விநாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீரும், கபிணியிலிருந்து 4,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X