பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் உதவி
பெங்களூரில் ஆகஸ்ட் 9ம் தேதி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது.
முதல்வர் கருணாநிதி மற்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகியோர் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து வள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான குழுவினர் சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
அப்போது விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் அளித்தனர். மேலும், திறப்பு விழா செலவுக்கு தமிழக அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநிலம் பெங்களூரில், பெங்களூர் தமிழ்ச் சங்கத்தினால் அமைக்கப்பட்டு, 9.8.2009 ஞாயிற்றுக்கிழமையன்று திறக்கப்படவிருக்கும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா செலவுகளுக்காக நிதியுதவி வழங்குமாறு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.மீனாட்சிசுந்தரம், செயலாளர் ஜி.தாமோதரன் ஆகியோர் கோரிக்கை அளித்தனர்.
அதனை ஏற்று, தமிழக அரசின் சார்பில் சிறப்பு மானியமாக 10 லட்ச ரூபாய் நிதியுதவிக்கான காசோலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.