உயர்ந்த கட்டடங்களில் கடகடவென ஏறி அசத்தும் கர்நாடக 'ஸ்பைடர் மேன்'
பெங்களூர்: நமக்கெல்லாம் பெரிய கட்டடங்களின் மேலே நின்று பார்த்தால் மயக்கம் வரும், கீழிருந்து பார்த்தால் தலையைச் சுற்றும். ஆனால் இது எதுவும் இல்லாமல் அப்படியே பல்லி போல படு வேகமாக ஏறி, அதே வேகத்தில் கீழே இறங்கியும் வந்து பயமுறுத்துகிறார் சித்ரதுர்காவைச் சேர்ந்த ஜோதி ராஜு என்ற தமிழர்.
எத்தகைய செங்குத்தான கட்டடமாக இருந்தாலும் சரி, கொஞ்சம் கூட அஞ்சாமல் கிடுகிடுவென ஏறி இறங்கி அசத்தி வருகிறார் இந்த இளைஞர்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் இவர். அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்தான்.
அங்குள்ள கோட்டைகளைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறார் ஜோதி ராஜு. இவருக்கு அப்பகுதியில் குரங்கு ராஜு என்று மக்கள் செல்லப் பெயர் வைத்துள்ளனராம்.
சிறு வயதிலேயே படிப்பு வரவில்லை என்று பாதியிலேயே பள்ளியை விட்டு நின்று விட்டார் ஜோதி. கட்டட வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் புன்னகை மன்னன் கமல் பாணியில் தப்பிப் பிழைத்து விட்டார்.
அதன் பின்னர்தான் இந்த சாதனை ஆர்வம் வந்ததாம். அதற்கு முக்கிய காரணம் நமது மூதாதையர்கள்தான் -அதாவது குரங்குகள்.
குரங்குகள் மரத்துக்கு மரம் தாவுவதை கூர்ந்து அப்சர்வ் செய்வாராம். எப்படி குரங்குகளால் இப்படித் தாவித் தாவிப் போக முடிகிறது என்பதைக் கவனித்த அவர், அதே போல தாமும் செய்ய தீர்மானித்தார்.
அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டபோது அது லாவகமாக வர அன்றிலிருந்து இவர் சிலந்தி மனிதனாக அறியப்பட்டார்.
இதுகுறித்து ராஜு கூறுகையில், நான் சுவரில் ஏற பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவர்கள் நான் சுவர் ஏறுவதை பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள் என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே எனது அவநம்பிக்கையை போக்கி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது என்கிறார்.
இப்போது உள்ளூர் சிலந்தி மனிதனாக அறியப்படும் தான் எதிர்காலத்தில் உலக அளவில் மிகப் பெரிய ஸ்பைடர் மேன் ஆக மாற வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் ஜோதி ராஜு.












Click it and Unblock the Notifications