அன்பழகன் தலைமையில் அண்ணா நூற்றாண்டு நினைவு மலர் கமிட்டி
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்படவுள்ள நினைவு மலர் தயாரிப்புக் கமிட்டி, அமைச்சர் அன்பழகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்மொழி இன வரலாற்றில் தனிப்பெரும் வளர்ச்சியும், மாற்றமும் நிகழ வழிவகுத்த அண்ணாவின் நூற்றாண்டு விழாவை தகுந்த முறையில் அரசு கொண்டாடி வருகிறது.
ஆற்றல்மிகு எழுத்துகளால் ஆர்வம் பெருக்கும் பேச்சுகளால் ஆட்சிப்பீடம் ஏறிய அண்ணா ஆற்றிய பணிகளும், சாதனைகளும் வரலாற்று சிறப்புடையவை. தமிழும், தமிழகமும் தலைநிமிர்ந்து வாழத் தன்னை முழுமையாய் ஒப்புவித்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பித்திடவும், விழாவின் இனிய நினைவு கள் என்றென்றும் நெஞ்சில் நிலைத்திடவும், நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அன்பழகன் தலைவராகவும், அமைச்சர் பரிதி இளம்வழுதி துணைத் தலைவராகவும், தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் உறுப்பினர்-செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கனிமொழி எம்.பி., கவிஞர்கள் அப்துல்ரகுமான், கா.வேழவேந்தன், மற்றும் கயல் தினகரன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மலர் தயாரிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், உறுப்பினர்-செயலர், உறுப் பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சி.காமராஜ், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறை தலைவர் ராமசாமி, பதிப்புத்துறை இயக்குனர் கண்ணபுரக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.