சிறந்த தமிழ் சாப்ட்வேருக்கு ரூ. 1 லட்சம் பரிசு-அரசு அறிவிப்பு
சிறந்த தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப்படும் பரிசுக்குரிய விண்ணப்ப தேதி செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கணினி யுகத்தில் அதற்கேற்ப தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும், தமிழ் மென்பொருள்களுள் சிறந்த மென்பொருள் ஒன்றைத் தெரிவு செய்து அதனை உருவாக்கியவருக்குக் கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகையாக ரூ.1,00,000 மும், அந்த நிறுவனத்திற்குப் பாராட்டு சான்றிதழையும் தமிழக அரசு வழங்கி வருகின்றது.
2009 - 10 ம் ஆண்டிற்கான பரிசுக்குரிய விண்ணப்பங்கள் 14.8.2009-க்குள் வந்து சேர வேண்டு என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு 15.9.2009 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில், தமிழ் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட மென் பொருளாக இருத்தல் வேண்டும். மென்பொருள் கடந்த மூன்றாண்டுக் காலத்திற்குள் (2006, 2007, 2008) தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மென்பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ, நிறுவனத்தாலோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கூட்டு முயற்சி என்றால் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள, பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
இந்த தொகை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நேரிடையாக பணமாகவும் செலுத்தலாம். அல்லது கேட்பு வரைவோலையாக - The Director of Tamil Development (I/C), Chennai - என்ற பெயரில் அனுப்பி வைக்கலாம்.
விதி முறைகள் அடங்கிய விண்ணப்பங்கள் வரும் 15.9. 2009 - ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
மேலும் தகவல் அறிய, தமிழ் வளர்ச்சி இயக்குநர் (பொ), தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரியில் கடிதம் மூலமும் , 044-28190412, 28190413 என்ற தொலை பேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.