127 பேருக்கு அண்ணா பதக்கம்
காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, காவல்துறை ரேகைப் பிரிவுகளில் மிகச் சிறப்பாக பணியாற்றிய 127 பேருக்கு இந்த ஆண்டுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு காவல்துறை ஆய்வாளர் மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் ஆகியோருக்கு அவர்கள் ஆற்றியுள்ள வீரதீரச் செயல்களைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான தமிழக முதல்வரின் வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படைப்பிரிவு மற்றும் காவல் துறை வீரர் ரேகைப்பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் சிறந்த சேவையைப்பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே 2009ம் ஆண்டு அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் காவல் கண்காணிப்பாளர் முதல் காவலர் நிலை வரையில் 100 காவல் துறை அலுவலர்களுக்கும், தீயணைப்பு அதிகாரி முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையில் 10 அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் 10 அலுவலர்களுக்கும் ஊர்க்காவல் படையில் படைத்தளபதி முதல் அணித்தளபதி நிலை வரையில் 5 நபர்களுக்கும்
மற்றும் காவல் துறை விரல் ரேகைப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய இரண்டு துணைக்காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஆக மொத்தம் 127 பேருக்குப் பணியில் காட்டிய மிகச்சிறந்த கடமைப்பற்றுதியைப் பாராட்டும் முகத்தான், அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு பணிநிலையின் அடிப்படையில் முறையே ரூ.2000, ரூ.3000 மற்றும் ரூ.5,000 அளிக்கப்படும்.
இது தவிர, தீயணைப்புத்துறையில் 4 தீயணைப்போர் மற்றும் காவல் துறையில் ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் ஆகியோருக்கு அவர்கள் ஆற்றியுள்ள வீரதீரச் செயல்களைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான தமிழக முதல்வரின் வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் வழங்கிடவும், இந்த பதக்கம் பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.100 பதக்கப்படியாக வழங்கம் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications